

புதுடெல்லி: கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 8.56 லட்சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் பலனாக, கடந்த 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 88 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. தற்போது மார்ச் மாத புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், கடந்த 2025-26 முழு நிதியாண்டில் இந்த முதலீடு 90 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப் பெரிதும் உதவி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.