

புதுடெல்லி: அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (பிஎஃப்) பணம் பங்களிப்பு செய்யும் வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்கள், கிக் தொழிலாளர்கள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(இபிஎஃப்ஓ) புதிதாக பிஎஃப் திட்டத்தைத் தயார் செய்து வருகிறது. புதிய திட்டம் அமலுக்கு வரும்போது இந்தத் தொழிலாளர்களும் பிஎஃப் திட்டத்தில் சேர்ந்து ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்களைப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்களுக்கு பணம் பிடித்தம் செய்யப்படுவது தற்போதைய இபிஎஃப்ஓ மாதிரியைப் பின்பற்றியே அமையும். இதில் சேரும் புதிய சந்தாதாரர்கள் தினசரி அல்லது ஆண்டுதோறும் நிதி பங்களிப்புச் செய்யும் வசதியைப் பெறுவர். இவர்கள் சார்பில் சேமிக்கப்படும் தொகைக்கு வட்டி மற்றும் வரிச் சலுகைகளும் கிடைக்கும். அதாவது, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையிலான பங்களிப்புக்கும், அதற்கான வட்டிக்கும் முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும்.
அதேபோல் பிஎஃப்-ல் சேர்க்கப்படும் பணத்தைத் திரும்பப் பெறும் முறையிலும் முக்கிய மாற்றங்களைச் செய்ய இபிஎஃப்ஓ அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஓய்வுபெறும் காலத்திலும் சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்புத் தொகையை இபிஎஃப்ஓ-விலேயே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த வசதி ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
சுயவேலைவாய்ப்பு பெறுவோர், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிஎஃப் திட்டத்தில் சேர்க்க தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பான கட்டமைப்பை உருவாக்க இபிஎஃப்ஓ அமைப்பு டெண்டர் கோரியுள்ளது. இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், சாதாரண தொழில் செய்பவர் கூட பிஎஃப் திட்டத்தில் பங்களிப்பை மேற்கொள்ள முடியும். இதன்மூலம் அவர் தனது ஓய்வுக்காலத்திற்குதிட்டமிட முடியும் என்று இபிஎஃப்ஓ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விரைவில் இந்த பிஎஃப் திட்டம் தயாரிக்கப்பட்டு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.