

அய்சால்: மிசோரம் மாநிலத்தில் இஞ்சி சாகுபடி மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ.189.79 கோடி மதிப்பிலான ‘மிசோரம் இஞ்சி இயக்கம்’ எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மிசோரம் முதல்வர் லால்டுஹோமா ஆகியோர் காணொலி வாயிலாக இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது: மிசோரம் இஞ்சியில் 6 முதல் 8 சதவீதம் வரை ‘ஒலியோ ரெசின்’ சத்து உள்ளது. இது உலக சராசரியான 3 சதவீதத்தை விட மிக அதிகம். ஆனால், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ இஞ்சி ரூ.500-க்கு மேல் விற்பனையாகும் நிலையில், விவசாயிகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை மட்டுமே வருமானம் பெறுகின்றனர்.
எனவே, இடைத்தரகர்களை அகற்றி, விவசாயிகளுக்கு நேரடிப் பலன் கிடைக்கச் செய்வதே மிசோரம் இஞ்சி இயக்கத்தின் நோக்கம். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் 6 மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிந்தியா கூறினார்.