

அனில் அம்பானி
மும்பை: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
வங்கிகளிடம் பெற்ற கடனைத் திசை திருப்பியதாகக் கூறப்படும் ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் ஹோம் பைனானன்ஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் இயக்குநர்களின் வீடுகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. ஒரே முகவரியில் பல நிறுவனங்கள் இயங்கி வந்ததை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி அளித்த புகார்களின் அடிப்படையில், அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் முக்கியமாகச் சிக்கியுள்ளன. இந்த மோசடிகளால் இந்திய வங்கிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.27,337 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி, முழு விசாரணையையும் உச்ச நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வருகிறது. ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் இந்தக் குழுமத்தைச் சேர்ந்த 2 உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வரும் நாட்களில் குழுமத்தின் முக்கிய இயக்குநர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அனில் அம்பானி குழுமத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.