Published : 22 May 2023 06:53 AM
Last Updated : 22 May 2023 06:53 AM

ஊராட்சிகளில் வீட்டு வரி, கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி: இன்று முதல் புதிய நடைமுறை அமலாகிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், வீட்டுவரி மற்றும் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத் தும் வசதியை ஊரக வளர்ச்சித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இனிமேல் ஊராட்சிகள் எந்தக்கட்டணத்தையும் ரொக்கமாகப் பெறக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரகவளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கடந்த 2022-23-ம்ஆண்டுக்கான ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின்போது, ‘‘ஊரகப் பகுதிகளில்மனைப்பிரிவுகள், கட்டிடம், தொழிற்சாலைகள் தொடங்கவும், தொழில் நடத்துவதற்கான அனுமதிகளும் ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும்.

கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும்கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்புகளுக்கு இணங்க, கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் தங்கள் வரி மற்றும் வரியல்லா வருவாய் இனங்களை எளிதாக செலுத்த ஏதுவாக ‘https://vptax.tnrd.tn.gov.in/’ என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்: இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் இன்றுமுதல் (மே 22) நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனாளிகள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இந்தஇணையதளத்தில் கிராம ஊராட்சிகளால் உள்ளீடு செய்யப்பட் டுள்ளது. இதில் 1.38 கோடி தரவுகள் உள்ளன.

இந்த இணையதளத்தில், கட்டணங்கள், வரிகளை இணையவழி கட்டணம், ரொக்க அட்டைகள், கடன் அட்டைகள், யுபிஐ கட்டணம், விற்பனை முனைய இயந்திரம்(பிஓஎஸ்) ஆகிய வழிகளில் செலுத்த முடியும். இதற்காக முதல்கட்டமாக 1000 பிஓஎஸ் இயந்திரங்கள் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மனைப்பிரிவுகளுக்கு கிராம ஊராட்சியின் அங்கீகாரம் என்பது நகர ஊரமைப்பு இயக்ககம் அல்லது சிஎம்டிஏவால் வழங்கப்படும் தொழில் முன் அனுமதியை பொறுத்து வழங்கப்படும். கட்டிட அனுமதி என்பது குடியிருப்பாக இருந்தால் 10 ஆயிரம் சதுரடிக்கு மிகாமலும், 8 வீடுகளுக்குள்ளும், 12 மீட்டர் உயரத்துக்கு மிகாமலும், தரை மற்றும் 2 தளங்கள் வரையிலும் ஊராட்சிகள் அனுமதியளிக்கலாம்.

வணிக கட்டிடமாக இருந்தால் 2 ஆயிரம் சதுரடிக்கு உட்பட்டிருந்தால் அனுமதியளிக்கப்படும். அனைத்து கட்டிட அனுமதிகளுக்குமான அனுமதி விண்ணப்பங்களும் இன்று முதல் இணையதளம் வழியாகவே தரப்பட வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகவே பரிசீலிக்கப்படும். கட்டணம் தொடர்பான கேட்புத் தொகை இணையதள வழியிலேயே அனுப்பப்படும்.

கிராம ஊராட்சிகள் எந்த ஒரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. இணையதளம் வழியாக ஆன்லைன் பிபிஏ தளத்தின் மூலம் மட்டுமே பெற வேண் டும்.

தொழிற்சாலைகளுக்கான கட்டிட அனுமதி மற்றும் உரிமம் ஆகியவையும் ஒற்றைசாளர முறையில் வழங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையும் இன்று முதல் அமலாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x