Published : 13 Sep 2017 09:47 AM
Last Updated : 13 Sep 2017 09:47 AM
பேசல் 3 விதிமுறைகளை பூர்த்தி செய்ய இந்திய வங்கிகளுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கோடி (6,500 கோடி டாலர்) தேவைப்படும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் ரேட்டிங்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறது. பேசல் 3 விதிமுறைகளை மார்ச் 2019-ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு தரமதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் கணித்ததை விட மிகவும் குறைவாகவே பிட்ச் கணித்திருக்கிறது. மூடி’ஸ் நிறுவனம் இந்திய வங்கிகளுக்கு ரூ. 6 லட்சம் கோடி (9,000 கோடி டாலர்) தேவை என கணித்திருந்தது.
இந்திய வங்கிகள் குறைவான மூலதனத்தை கொண்டிருப்பது முக்கியமான பிரச்சினையாகும். வங்கிகள் மூலதனத்தை உயர்த்தவில்லை என்றால் பிரச்சினை மேலும் அதிகரிக்கும் என பிட்ச் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை பெரிதும் இல்லாததால் பங்குச்சந்தை மூலம் வங்கிகள் நிதி திரட்ட முடியவில்லை அதனால் கூடுதல் நிதிக்கு மத்திய அரசை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.
அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை விட குறைந்த பட்சம் இரு மடங்குக்கு மேல் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் வாராக்கடனை குறைக்க முடியும், கடன் வளர்ச்சி விகிதத்தை உயர்த்த முடியும். வாராக்கடன் பிரச்சினையில் தீர்வு மற்றும் கூடுதல் கிடைக்கவில்லை என்றால் பொதுத்துறை வங்கிகள் தற்போதைய சிக்கலில் இருந்து மீள்வது கடினம் என பிட்ச் தெரிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி வாராக்கடனுக்கான தீர்வுகளை கண்டறிவதற்கான பணியில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் கூடுதல் நிதி கிடைக்கும் என வங்கிகளும் அரசும் நம்பிக்கையில் உள்ளன. மொத்த வாராக்கடனில் 25 சதவீதம் 12 வாராக்கடன் கணக்கில் உள்ளன. மேலும் 50 புதிய கணக்குகளை ரிசர்வ் வங்கி அடையாளம் காண்பித்திருக்கிறது. இதற்கு தீர்வு காணும் பணியில் வங்கிகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT