Published : 28 Sep 2017 10:24 AM
Last Updated : 28 Sep 2017 10:24 AM
வோடபோன் நிறுவனமும் ஐடியா செல்லுலர் நிறுவனமும் இணையும் நடவடிக்கை அடுத்த ஆண்டில் முழுமை பெறும் என்று வோடபோன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுநீல் சூட் தெரிவித்தார்.
டெல்லியில் தொடங்கிய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
இணைப்பு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக நிறைவேற வேண்டியுள்ளது. முதலில் நிறுவனங்களிடையே போட்டித் தன்மையை கண்காணிக்கும் இந்திய அமைப்பு (சிசிஐ), பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி), தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆகியவற்றிடம் அனுமதி பெற வேண்டும். இவற்றின் அனுமதி பெறும் நடவடிக்கைகள் முறையாக, சரியாக நடைபெற்று வருகின்றன என்றார்.
இணைப்பு நடவடிக்கைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு அடுத்த ஆண்டுக்குள் நிறைவேற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நிறுவனங்களும் இணைவதென முடிவு செய்யப்பட்டது. இரு நிறுவனங்களும் இணைவதன் மூலம் நிறுவனங்களின் சொத்து மதிப்பு 2,300 கோடி டாலராகவும் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 35 சதவீதத்தைக் கொண்டதாகவும் இணைப்பு நிறுவனம் திகழும்.
தற்போது ஐடியா நிறுவனம் 2-வது இடத்திலும், வோடபோன் நிறுவனம் 3-வது இடத்திலும் உள்ளன. இரு நிறுவனங்களும் இணைவதன் மூலம் முதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்படும்
ரிலையன்ஸ் ஜியோ போன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இத்துறையில் கடுமையான போட்டியும், கட்டண குறைப்பு நடவடிக்கையும் தொடர்வது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT