Published : 24 Sep 2017 08:30 AM
Last Updated : 24 Sep 2017 08:30 AM

டர்பனில் நவம்பர் 15-ம் தேதி நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

நான்காம் உலகத் தமிழ் பொருளாதார மாநாடு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டர்பனில் நடக்க இருக்கிறது. உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து இதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 2009-ம் ஆண்டு இந்த மாநாடு முதல் முறையாக சென்னையில் நடத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு துபாயிலும் மற்றும் 2016-ம் ஆண்டு சென்னையிலும் நடந்தது. இந்த ஆண்டு டர்பனில் நடக்க இருக்கிறது.

இது குறித்து இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் விஆர்எஸ் சம்பத் மேலும் கூறியதாவது: தமிழர்கள் பல நாடுகளில் வசிக்கும் போது இந்த மாநாடு டர்பனில் ஏன் நடக்க வேண்டும் என்னும் கேள்வி எழுவது இயல்பானதே. ஆனால் டர்பனில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கிறார்கள். இதன் காரணமாகவே இங்கு இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. பொதுவாக வெளிநாடுகளில் தமிழர்கள் இருக்கும் நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் அல்லது பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக இருக்கும். ஆனால் இந்த மாநாடு தொழில், முதலீடு மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்க இருக்கிறது.

கயானா பிரதமர், மொரீஷியஸ் துணை அதிபர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தவிர உலகம் முழுவதும் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் வர இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பல முக்கியமான தொழிலதிபர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தமிழர் மாநாடாக இருந்தாலும், தமிழர் அல்லாத முக்கிய பிரமுகர்கள் பலரையும் இந்த மாநாட்டுக்கு அழைத்திருக்கிறோம். மத்திய அமைச்சர்கள் சிலரும், மாநில அரசின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். ஒரு வருடம் வெளிநாட்டிலும் மறு ஆண்டு உள்நாட்டிலும் நடத்த முடிவெடுத்திருக்கிறோம். தமிழர்கள் பணி செய்வதில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தொழிலில் மற்ற பிராந்திய மக்களுடன் ஒப்பிடும்போது சற்று பின் தங்கி இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றுவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என சம்பத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x