ஓசூரில் மகசூல் பாதிப்பு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை 100% உயர்வு

ஓசூர் உழவர் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்கள்.
ஓசூர் உழவர் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்கள்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் மகசூல் பாதிப்பு மற்றும் கோடைகால தேவை அதிகரிப்பு காரணமாக எலுமிச்சை பழத்தின் விலை கடந்த நாட்களை விட 100 சதவீதம் உயர்ந்துள்ளது. முதல்தரமான பழங்கள் கர்நாடகா சந்தைக்கு விற்பனைக்கு செல்கின்றன.

கோடைகாலம் தொடங் கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் பழச்சாறுகளை அதிகமாகப் பருகி வருகின்றனர். குறிப்பாக, அதிக மருத்துவக் குணங்களைக் கொண்ட எலுமிச்சை பழச் சாற்றை அதிகமாகப் பருகி வருகின்றனர். இதனால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித் துள்ளது.

இந்நிலையில், ஓசூர் உழவர் சந்தைக்குச் தினசரி 400 கிலோ எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்தநிலையில், தற்போது 200 கிலோ மட்டும் வருகிறது. இதனால், எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையான நிலையில், கடந்த சில நாட்களாக ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது.

கடந்த மாதம் ஒரு எலுமிச்சை பழம் ரூ.3 முதல் ரூ.4 வரை விற்பனையானது. தற்போது, ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது. அதேநேரம் உழவர் சந்தையைத் தவிர மற்ற சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு பழம் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தேவை அதிகரிக்கும் என்பதால், விலை மேலும் உயரும் என எலுமிச்சை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக எலுமிச்சை விவசாயிகள் கூறியதாவது: பனி மற்றும் மழையின் காரணமாக எலுமிச்சை பழம் உற்பத்தி குறைந்துள்ளது, இதனால், சந்தைக்கு எலுமிச்சை பழம் வரத்து குறைந்த நிலையில், தற்போது, தேவை அதிகரித்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது. முதல் தரமான பழம் ஒரு கிலோ ரூ.200-க்கும் 2-ம் தரம் ரூ.150-க்கும், 3-ம் தரம் ரூ.120-க்கும் விற்பனையாகிறது.

2 மற்றும் 3-வது தரமான பழங்கள் மட்டும் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் தரமான பழங்கள் வெளிச் சந்தைகளுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. வரும் நாட்களில் உற்பத்தி அதிகரித்தால், விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in