Published : 13 Mar 2023 06:02 PM
Last Updated : 13 Mar 2023 06:02 PM

எஸ்விபி திவால் எதிரொலி: சென்செக்ஸ் 897 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 897புள்ளிகள் (1.52 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 58,237 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 258 புள்ளிகள் (1.48 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,154 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் தட்டையாகத் தொடங்கிய போதிலும் விரைவில் ஏற்றத்தை நோக்கி சென்றது. காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 121.10 புள்ளிகள் உயர்வடைந்து 59,256.23 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40.65 புள்ளிகள் உயர்வடைந்து 17,453.55 ஆக இருந்தது.

மூன்று அமெரிக்க வங்கிகளின் திடீர் வீழ்ச்சியால் உலகளாவிய சந்தைகளில் பலவீனமான சூழல் நிலவியது. இதனால் துவக்க வர்த்தகத்தை லாபத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் அடுத்து நிலையில்லாமல் பயணிக்கத் தொடங்கின. சிலிக்கான் வேலி வங்கியின் எதிரொலியால் வங்கிப் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. முதல் பாதிநாள் வர்த்தகத்தில் தாக்கு பிடித்த இந்திய பங்குச் சந்தைகள் பிற்பாதியில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதனால், சென்செக்ஸ் 5 மாதங்கள் இல்லாத அளவிற்கு, 1,415 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து இந்த ஆண்டின் புதிய குறைவாக 58,095 வரைச் சென்றது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 897.28 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 58,237.85 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 258.60 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,154.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, ஐடிசி, டாடா ஸ்டீஸ், ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என அனைத்து பங்குகளும் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x