Published : 23 May 2017 10:00 AM
Last Updated : 23 May 2017 10:00 AM

வாராக் கடன் அவசரச் சட்டத்துக்கு 15 நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வாராக்கடன் அவசரச் சட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறை களை இன்னும் 15 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கி வெளியிட இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகளின் வாராக்கடன் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. இதனை மீட்பதற்கு வாராக்கடன் அவசரச் சட்டம் கடந்த மே மாதம் 6-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். வாராக்கடனை வசூலிப்பதற்கு இந்த வாராக்கடன் அவசர சட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் நடைமுறைகளை ரிசர்வ் வங்கி இன்னும் 15 நாட்களில் வெளியிட இருக்கிறது.

இந்த அவசரச் சட்ட வழிமுறையில் வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிய புதிய அமைப்பு கொண்டுவர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புதிய வழிமுறைகளை இந்த சட்டத்தில் கொண்டுவர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கால அளவு 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வாராக்கடனால் பாதிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிறுவனங்களை கண்டறிவதற்கு தனியான அமைப்பு அமைப்பதற்கு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. அதுபோன்ற நிறுவனங்களை கண்டறிந்து வங்கிகளுக்கு இந்த அமைப்பு தெரிவிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

வங்கிகள் திவால் சட்ட நடைமுறைகளை தொடங்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்ட பிறகு ரிசர்வ் வங்கி வாராக்கடனுக்கு தீர்வு காணும் வகையில் 50 வழக்குகளை இதுவரை கண்டறிந்துள்ளது.

வாராக்கடன் தீர்வு காண்பதற்கான வழக்குகளை ஏற்கெனவே ஜாயின்ட் லெண்டர்ஸ் அமைப்பு கண்டறிந்துள்ளது. ஆனால் இந்த வழக்குகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. இதுபோன்ற வழக்குகளை ரிசர்வ் வங்கி எடுக்கும். மேலும் தீர்வு காண்பதற்கு இந்த வழக்குகளை வங்கிகளுக்கு மாற்றம் செய்யமுடியும் என்று நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலில் பூஷண் ஸ்டீல் மற்றும் ஜிவிகே பவர் உள்ளிட்ட 12 நிறுவனங்களை வாராக்கடன் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x