Last Updated : 30 May, 2017 09:54 AM

 

Published : 30 May 2017 09:54 AM
Last Updated : 30 May 2017 09:54 AM

ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு கூடுதல் வரி மூலம் ரூ.55,000 கோடி வருவாய்: மத்திய அரசு கணிப்பு

ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு 9 மாதங்களில் கூடுதல் வரி (செஸ்) மூலம் ரூ.55,000 கோடி வருவாய் ஈட்ட முடியும் என மத்திய அரசு கணித்துள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப் படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கில் நிலக்கரி, சொகுசுப் பொருட்கள் மற்றும் பான் மசாலா போன்றவைக்கு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் வரி மூலம் ரூ.55,000 கோடி வருவாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு கணித்துள்ளது. நிலக்கரி, லிக்னைட் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி மூலம் ரூ.22,000 கோடி வருவாய் ஈட்டமுடியும் என மத்திய வருவாய் துறை கணித்துள்ளது. புகையிலைக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி மூலம் ரூ.16,000 கோடி வருவாய் ஈட்டமுடியும் என கணித்துள்ளது.

மீதமுள்ள தொகை பான் மசாலா, காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி மூலம் வரும். இந்த கூடுதல் வரி அனைத்தும் ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் சேர்க்கப்படும்.

ஜிஎஸ்டியை அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை பல்வேறு பொருட்களின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரி மூலம் ஈடுசெய்ய முடியும் என மத்திய வருவாய் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

``இந்த ஆண்டில் மாநிலங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கவேண்டும் என்பது குறித்து தோராயமான ஒரு கணக்கீட்டை வைத்துள்ளோம். இந்த ஆண்டு கூடுதல் வரி மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டமுடிகிறதோ அதை வைத்தே மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு நிதி கூடுதலாக இருக்கும் என மத்திய வருவாய் துறை கணக்கீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதிலிருந்து பெரிய மாநிலங்களுக்கு பெரிய அளவுக்கு இழப்பீடு அளிக்க வேண்டிய தேவை இருக்காது. சிறிய மாநிலங்களுக்கு மட்டும் இழப்பீடு அளிக்க வேண்டிய தேவை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உற்பத்தி நிறைந்த பெரிய மாநிலங்களில் நுகர்வு சார்ந்து எந்தவொரு இழப்பீடு ஏற்படும் என கணிக்கவில்லை. மாறாக ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு பொருட்களின் விலை கணிசமாக குறையும். இதனால் மாநிலங்களின் வருவாய் 14 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x