Published : 01 Feb 2023 07:57 AM
Last Updated : 01 Feb 2023 07:57 AM

பங்குகள் கடுமையாக சரிந்ததால் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார் அதானி

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானிக்கு (60) சொந்தமான நிறுவனப் பங்குகள் கடந்த 2021, 2022-ம் ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டின. இதனால் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் முறையாக (10-ம் இடம்) கடந்த ஆண்டு நுழைந்தார். பின்னர் படிப்படியாக 2-ம் இடம் வரை முன்னேறினார்.

இந்நிலையில், அதானி குழும நிறுவன கணக்கு வழக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்தஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தன. இதனால் கவுதம் அதானி யின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.2.9 லட்சம் கோடி சரிந்துள்ளது. அவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.6.9 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் புளூம்பெர்க் நிறுவனத்தின் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறி உள்ளார். அவர் இப்போது 11-ம்இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். எனினும், இந்தியாவின் முதல் பணக்காரராகவே நீடிக்கிறார். முகேஷ் அம்பானி 2-ம் இடத்தில் உள்ளார்.

பங்கு கேட்டு 100% விண்ணப்பம்: அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்ட தொடர் பங்கு வெளியீடு (எப்பிஓ) மூலம் 4.55 கோடி பங்குகளை விற்க முன்வந்தது. இதற்கு விண்ணப்பம் செய்வதற் கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்தது.

அதானி குழும பங்குகள் ஏற்கெனவே மளமளவென சரிந்து வரும்சூழ்நிலையிலும், பங்குகளை எப்பிஓ மூலம் வாங்க 5.08 கோடி பேர் (112%) விண்ணப்பித்துள்ளனர். இந்த பங்கின் விலை நேற்று 3.35% உயர்ந்து ரூ.2,948-ல் நிலை பெற்றது. எப்பிஓ விலை ரூ.3,112 முதல் ரூ.3,276-க்குள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x