Published : 25 Jan 2023 04:07 AM
Last Updated : 25 Jan 2023 04:07 AM

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இருந்து மலேசியாவுக்கு 1 கோடி முட்டைகள் அனுப்ப நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு 20 கன்டெய்னர்கள் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5.50 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

மேலும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்படி மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து குறிப்பாக நாமக்கல்லில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு முதல்முறையாக முட்டை ஏற்றுமதி தொடங்கியது.

இது தொடர்பாக அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது: நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 10 கன்டெய்னர் மூலம் 50 லட்சம் முட்டைகள் முதல்முறையாக மலேசியாவுக்குப் பரிசோதனை அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஆர்டர்கள் கிடைத்து வருகிறது. இம்மாதம் 20 கன்டெய்னர்கள் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட உள்ளன. இது பிப்ரவரியில் 40 கன்டெய்னர்களாக உயர வாய்ப்புள்ளது. நாமக்கல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தரமாகவும், ஏற்றுமதிக்கான எடையும் சரியாக உள்ளதால், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் நாமக்கல் முட்டையை வாங்கத் தொடங்கி உள்ளனர்.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் முட்டை விலை குறைவாகவே உள்ளது. முட்டை ஏற்றுமதிக்கு இதுவும் ஒரு வாய்ப்பாகும். ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விரைவில் மேலும் பல நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x