

புதுடெல்லி: மாருதி சுசூகி நிறுவனத்தைத் தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் ஏர்பேக் வடிவமைப்பில் குறைபாடுள்ள 1,400 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், டிசம்பர் 8, 2022 முதல் ஜனவரி 12, 2023 வரையில் தயாரித்த அல்டோகே10, எஸ்-பிரஸ்ஸோ, இகோ,பலேனோ, பிரீஸா, கிராண்ட் விதாரா உள்ளிட்ட மாடல் கார்களில் ஏர்பேக்கின் வடிவமைப்பில் உள்ள பிரச்சினை காரணமாக 17,000 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் டொயோட்டா நிறுவனமும் இந்தக் காலகட்டத்தில் தயாரித்த கிளான்ஸா மற்றும் அர்பன் க்ருசியர் ஹைரைடர் ஆகிய இரண்டு மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மொத்தமாக 1,400 கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
இந்தக் கார்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் ஏர்பேக்கில் பிரச்சினை இருப்பது உறுதி செய்யப்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு அது சரி செய்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், சீட் பெல்ட் வடிமைப்பு பிரச்சினை காரணமாக மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மாடல் கார்களை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.