Published : 18 Dec 2022 09:05 AM
Last Updated : 18 Dec 2022 09:05 AM

வாழ்வாதார நெருக்கடியில் தவிக்கும் மென்பொறியாளர்கள்: ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்புகள் 30% ஆக உயர்வு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்புகள் 30 சதவீதமாக உயர்ந்துள்ளதால், வாழ்வாதார நெருக்கடியில் மென்பொறியாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே, ஐ.டி. துறைக்கென பிரத்யேக பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்கள் பல ஆண்டுகளாக முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இத்துறையை பொருத்தவரை அதிக அளவிலான ஊதிய உயர்வுகள், பணியாளர் பலன்கள், மிக முக்கியமாக வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புகள் பெரிதும் காணப்படுகின்றன. இதுவே பெரும்பாலானோர் இத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இத்துறை 227 பில்லியன் டாலர் வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி மூலம் நடப்பு நிதியாண்டில் 0.45 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்பும் ஒருபுறம் நடந்து வருகிறது. ட்விட்டர், மெட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை சமீபத்தில் பணிநீக்கம் செய்தன. அந்த வகையில் டீம் லீஸ் டிஜிட்டல் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 2025-ம் ஆண்டுக்குள் ஐ.டி. துறையில் 22 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு பொருளாதார மந்தநிலை காரணம் என கூறுகின்றனர்.

அதாவது, இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளாக திகழும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்பு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை மிரட்டி அவர்களை ராஜினாமா செய்ய (post resignation) வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும் 60 லட்சத்துக்கும் மேலான ஐ.டி. ஊழியர்கள் உள்ளனர். கடந்த காலங்களில், ஆண்டுதோறும் 15 சதவீதம் வரை ஐ.டி. ஊழியர் வேலை இழப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது இது ஆண்டுக்கு 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், வாழ்வாதார நெருக்கடியில் மென் பொறியாளர்கள் தவிக்கின்றனர். இதுகுறித்து ஐ.டி. மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின் கூறியதாவது:

ஐ.டி. நிறுவனங்களில் தற்காலிக பணிநீக்கம் என்பதைவிட நிரந்தர பணி நீக்கம்தான் நடந்து கொண்டிருக்கிறது. நிரந்தர பணி நீக்கத்துக்கான வரையறையுடன் ஒரு சட்டம் இந்தியாவில் இருக்கிறது. நிறுவனத்தில் ஏற்படும் இழப்பை காரணம் காட்டிதான் நிரந்தர பணி நீக்கத்தை அந்நிறுவனங்கள் செய்ய முடியும் என அச்சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், பல நூறு கோடி லாபகரமாக இயங்கிவரும் நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டும், தங்கள் லாபத்தை மேலும் அதிகரிக்கவும் சட்டத்துக்கு மாறாக ஐ.டி. ஊழியர்களை மிரட்டி அவர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தி வருகின்றன.

சென்னையிலும் தற்போது சில முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் இதுபோல அதிக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ஊழியர்களை வேலையில் இருந்து விடுவிப்பதைவிட, ஊழியர்களே நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்து கொண்டால், சட்டப்பூர்வமான எதிர்ப்புகள் எதுவும் வராது என ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன. ஆனாலும், மிகப்பெரிய அளவில் நடக்கும் இதுபோன்ற வேலை இழப்புகள் எதுவும் அரசின் கவனத்துக்கு செல்வது இல்லை.

பொருளாதார மந்தநிலை இன்னும் இந்தியாவை தாக்கவில்லை என்றாலும், இதுபோன்ற ஆயிரக்கணக்கான ஐ.டி. நிறுவன ஊழியர்களின் வேலை இழப்பு பொருளாதார மந்தநிலை அறிகுறியை வெளிப்படுத்துகிறது. ஐ.டி. துறைக்கென பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அரசு அமல்படுத்துவதன் மூலமாக மட்டுமே வேலை இழப்பை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். வேலையில் இருந்து விடுவிப்பதைவிட, ஊழியர்களே ராஜினாமா செய்தால், சட்டப்பூர்வமான எதிர்ப்புகள் வராது என ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x