Published : 25 Jul 2014 10:00 AM
Last Updated : 25 Jul 2014 10:00 AM
காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு (எப்டிஐ) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இப்போது இந்த வரம்பு 26 சதவீதமாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை அந்நிய நேரடி முதலீட்டு வரம்புக்கு ஒப்புதல் அளித்தது. நேரடி முதலீடுகள் அனைத்தும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்ஐபிபி) மூலமாக மட்டுமே மேற்கொள் ளப்படும்.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2014-15) பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவை இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வரவேற்றுள்ளது. காப்பீட்டுத் துறையின் நிதித் தேவை இதன் மூலம் பூர்த்தியாகும். இதனால் புதிய காப்பீட்டுத் திட்டங்கள் மக்களுக்குக் கிடைக்கும். அத்துடன் விநியோக எல்லையும் விரிவடையும் என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அந்நிய முதலீட்டு வரம்பு அதிகரிப்பதால் காப்பீட்டுத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வருவதற்கு வழியேற்படும் என்றும் பானர்ஜி தெரிவித்தார்.
`செபி’-க்கு கூடுதல் அதிகாரம்
பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மோசடித் திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்க வழியேற்பட்டுள்ளது. பொருளதார விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவை (சிசிஇஏ) செபி சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்தது.
காப்பீடு, வங்கி பங்கு உயர்வு
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீத அளவுக்கு உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து வங்கித்துறை மற்றும் காப்பீட்டுத் துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. பாங்க் ஆப் பரோடா, யெஸ் வங்கி, ஆந்திர வங்கி, யூனியன் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் பங்கு விலைகள் உயர்ந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT