Published : 27 Sep 2022 03:46 AM
Last Updated : 27 Sep 2022 03:46 AM

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு

மும்பை: மும்பை பங்குச் சந்தை வீழ்ச்சியால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், பங்குச் சந்தை வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தொடர்ந்து 4 நாள் மந்த நிலையால் வர்த்தகத்தின் இடையே நிஃப்டி 17,000 புள்ளிக்கும் கீழ் சரிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து மற்ற துறை பங்குகள் அனைத்தும் குறைந்த விலைக்கு கைமாறின. குறிப்பாக, உலோகம், மோட்டார் வாகனம், பொதுத் துறை வங்கிகள், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் விலைபெரும் சரிவை சந்தித்தது.

ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகள் 1 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதேசமயம், அதானி போர்ட்ஸ் 6 சதவீதமும், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, மாருதி சுஸுகி பங்குகள் 5 சதவீதத்துக்கும் அதிகமாக இழப்பை சந்தித்தன. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 954 புள்ளிகளை இழந்து 57,145-ல் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 311 புள்ளிகள் குறைந்து 17,016-ல் நிலைத்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.269.86 லட்சம் கோடியாக சரிந்தது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

அந்நியச் செலாவணி சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 81.60 ஆக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதையடுத்து ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x