Published : 26 Aug 2022 08:58 PM
Last Updated : 26 Aug 2022 08:58 PM

பயணிகளின் தரவுகளை பணமாக்கும் திட்டத்தை கைவிட்டது ஐஆர்சிடிசி: பிரைவசி சிக்கல் காரணமா?

புதுடெல்லி: பயணிகளின் தரவுகளை பணமாக மாற்றும் திட்டத்தை ஐஆர்சிடிசி கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைவசி சார்ந்த சிக்கல் குறித்து பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனை தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவை (2018) இந்திய அரசு திரும்பப் பெற்ற காரணத்தால் இந்திய ரயில்வே / ஐஆர்சிடிசியின் தரவுகளை பணமாக்கும் வகையில் ஆலோசகரை நியமிப்பதற்கான இ-டெண்டர் ஐஆர்சிடிசி மூலம் ஜூலை 29, 2022 கோரப்பட்டது. இப்போது அது திரும்பப் பெறப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையில் ஐஆர்சிடிசி பங்குகள் 0.17 சதவீதம் உயர்ந்து ரூ.718.50 என நிறைவு பெற்றுள்ளது.

முன்னதாக, இணையதளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான கணக்கை தொடங்க பெயர், பிறந்த தேதி, இ-மெயில், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். மேலும், ஆதார் எண்ணை இணைத்தால் கூடுதல் பயணச் சீட்டுகளை முன்பதிவு கொள்ளலாம். இதன்படி கோடிக்கான பயணிகளின் தரவுகள் ஐஆர்டிசியிடம் இருக்கும்.

அந்த தரவுகளை பணமாக மாற்ற ஐஆர்சிடிசி திட்டமிட்டது. மேலும், ரயில்வே நிறுவனத்தை பயன்படுத்தி வரும் மற்ற தரவுகளையும் பணமாக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஆலோசர்களை நியமிக்க Appointment of Consultant for Digital Data Monetization of Indian Railway/IRCTC என்ற பெயரில் டெண்டர் கோரப்பட்டது.

அதன்படி அந்த ஆலோசர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பல்வேறு ரயில்வே இணையதளங்களில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து, அதை பணமாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தயார் செய்து அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் ரூ.1000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டது. அதுதான் இப்போது கைவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x