Published : 29 Jun 2022 02:32 PM
Last Updated : 29 Jun 2022 02:32 PM

வேதாந்தா குழுமத்துக்கு ரூ.5000 கோடி கடன் கொடுக்கும் எல்ஐசி? 

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால்: கோப்புப் படம்

புதுடெல்லி: அமெரிக்காவில் அதிக வட்டிக்கு வாங்கிய கடன் காரணமாக பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் வேதாந்தா நிறுவனம், இந்தியாவின் முன்னணி காப்பீடு நிறுவனமான எல்ஐசியிடம் குறைந்த வட்டிக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்கவுள்ளது. குறைந்த வட்டிக்கு எல்ஐசியிடம் கடன் வாங்கி அமெரிக்காவில் அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க வேதாந்தா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொழிலதிபர் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. துத்தநாகம், ஈயம், வெள்ளி, இரும்புத் தாது, எஃகு, தாமிரம், அலுமினியம், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த நிறுவனங்களை உலகம் முழுவதும் நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை விற்பனை செய்ய வேதாந்தா குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக விருப்ப மனுக்களைக் கோரி விளம்பரம் செய்துள்ளது.

வேதாந்தா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக வட்டிக்கு வாங்கிய கடன் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. வேதாந்தா மட்டுமின்றி உலக அளவில் நடந்து வரும் பொருளாதார மாற்றங்கள் இந்திய நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளன.

கழுத்தை நெறிக்கும் கடன்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது, அமெரிக்காவில் உயர்ந்து வரும் பணவீக்கம் போன்றவை இந்திய நிறுவனங்களான வேதாந்தா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது.

அமெரிக்க வட்டி விகிதம் உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறும் நிலை, ரூபாயின் பலவீனம் போன்ற காரணங்களால் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கான தொகையை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த காலண்டர் ஆண்டில் இதுவரை, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சுமார் 5 சதவீதம் சரிந்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் டாலர் மதிப்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடன் பெற்றுள்ளன. இந்த கடனுக்கான வட்டி இன்றைய நிலையில் 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்வால் செலுத்த வேண்டிய வாங்கிய தொகையின் மதிப்பும் அதிகரித்து விட்டது.

2024 இல் முதிர்ச்சியடையும் வேதாந்தா ரிசோர்சஸ் மற்றும் டாடா மோட்டார்ஸின் டாலர் மதிப்பிலான கடன், ரூபாய் மதிப்பு சரிவால் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. அதானி கிரீன் எனர்ஜியின் வெளிநாட்டு நாணயப் பத்திரங்கள் மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. ஜிஎம்ஆர் ஹைதராபாத்தின் 2026 ஆண்டு பத்திரங்களுக்கும் இதே நிலை தான்.

இதனால் வேறு இடத்தில் கடன் வாங்கி வெளிநாட்டுக் கடனை அடைக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக வேதாந்தா நிறுவனம் நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியிடம் கடன் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரிவர்த்தனை மூலம் ரூ.4,809 கோடி திரட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 10 வருடங்களில் திருப்பிச் செலுத்த தக்க வகையில் இது நேரடி வர்த்தக முறையில் விலை நிர்ணயம் செய்து சுமார் 8.50 சதவீத வட்டிக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்காக வேதாந்தா நிறுவனம் 18 மாத ஆவணங்களை விற்பனை செய்வதன் மூலம் சுமார் ரூ.1,800 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை திரட்ட முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிதி திரட்டலில் ஈடுபடக்கூடிய முதலீட்டாளர் யார் என்ற விவரத்தை வேதாந்தா அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. வேதாந்தா இந்த கடனை ஏற்கனவே உள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் மூலதனச் செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வேதாந்தா நிறுவனம், ஐடிபிஐ வங்கி மற்றும் கனரா வங்கியில் இருந்து ரூ. 1,000 கோடியை மூன்று ஆண்டுகளுக்கு 7.68 சதவீத வட்டியில் கடன் வாங்கியது. ஏற்கனவே உள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும் நிறுவனத்தின் முதலீட்டுக்காகவும் இந்த கடன் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதிர்ச்சியடையும் வகையில் பத்திரங்கள் மூலம் இரு வங்கிகளும் தலா ரூ.500 கோடியை வழங்கியுள்ளன. இந்த தொகையும் வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்கே பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x