Published : 15 Jun 2022 06:15 AM
Last Updated : 15 Jun 2022 06:15 AM

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா 2-ம் இடம்

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மிக அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகள் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாளொன்றுக்கு 8.19 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளன. கடந்த காலங்களில் இறக்குமதி செய்த அளவைக் காட்டிலும் இது மிக அதிகமாகும்.

அதிக சப்ளை செய்த நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இராக் உள்ளது. இதுவரை இரண்டாமிடத்தில் இருந்த சவூதி அரேபியா தற்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதனால் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தவிர்த்தன. பொதுச் சந்தை விலையை விட அதிக சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா இந்தியாவுக்கு அளித்துள்ளது.

இதற்கு முன்பு போக்குவரத்து செலவு அதிகமாக இருந்ததால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் வாங்குவது குறைவாக இருந்தது. தற்போது அதிக சலுகை விலையில் வழங்கியதால் இந்திய நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தன.

இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெய்யில் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்த அளவு மே மாதத்தில் 16.5 சதவீதமாகும். ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்தான இறக்குமதி அளவு 11.5 சதவீதமாகும்.

இது ஏப்ரலில் 5 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது இறக்குமதி அளவு 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x