Published : 11 Jun 2022 07:19 AM
Last Updated : 11 Jun 2022 07:19 AM

இந்திய பொருளாதார வளர்ச்சி: பிட்ச் நிறுவன கணிப்பில் மாற்றம்

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது தர வரிசையை தரச்சான்று நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம் உயர்த்தியுள்ளது. முன்னர் மைனஸுக்கும் கீழாக நெகடிவ் என குறிப்பிட்டிருந்தது. தற்போது அந்தக் குறியீட்டை ஸ்திரமாக உள்ளதாக மாற்றியுள்ளது.

நடுத்தர கால வளர்ச்சி விகிதமானது மிக வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நிதித்துறையில் தேக்க நிலை மாறிவருகிறது. இதனால் தனது மதிப்பீடுகளை மாற்றியுள்ளது.

2022-23-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்றும் மார்ச் மாதம் மதிப்பிட்டது. பின்னர் பண வீக்க உயர்வு காரணமாக வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச கமாடிடி சந்தையில் அடுத்து வரும் நாள்களில் மிகப் பெருமளவு மாற்றம் இருக்காது என்றும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இருப்பினும் நாட்டின் நிதிநிலை பலவீனமாக உள்ளது என்றும் கடன் விகிதம் தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதிக மானிய சலுகை மற்றும் எரிபொருள் மீதான உற்பத்தி வரிக்குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜிடிபி 0.8 சதவீதம் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் ஜிடிபி 6.8 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிடிபி பற்றாக்குறை

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 10.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. 2023-24-ம் நிதி ஆண்டிலிருந்து 2026-27-ம் நிதி ஆண்டு வரையான காலத்தில் 7 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீத அளவுக்கு இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆனால் பிட்ச் மதிப்பீட்டின்படி பணவீக்கம் 6.9 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x