Published : 26 Apr 2022 10:18 AM
Last Updated : 26 Apr 2022 10:18 AM

எல்ஐசி ஐபிஓ: மே.4-ம் தேதி வெளியீடு: கெடு நெருங்குவதால் நடவடிக்கை

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ எனப்படும் பொதுப் பங்கு வெளியீடு மே.4-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மே 12-ம் தேதி இறுதி தேதி என்பதால் பங்கு வெளியீட்டை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எல்ஐசியில் 5% பங்குகளை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படும் எனத் தெரிகிறது.

இதில் 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட இருப்பதாகவும், 5% தள்ளுபடி வழங்கப்படவும் இருக்கிறது.

ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பங்குகள் விற்பனை தொடர்பான வரைவு அறிக்கையை (டிஆர்ஹெச்பி) எல்ஐசி தாக்கல் செய்துள்ளது. பொதுப் பங்கு வெளியீட்டு தேதி மார்ச் 31-ம் தேதியாக இருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது.

எனினும், உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிந்தன. இதையடுத்து, பங்கு விற்பனை தள்ளிப்போனது. பங்குச்சந்தை ஏற்ற - இறக்கமாக இருப்பதன் காரணமாக எல்ஐசியின் பங்கு வெளியீடு பாதிக்கப்படக் கூடும் என்பதால் மத்திய அரசு பங்கு வெளியீட்டை தாமதித்து வந்தது.

அதேசமயம் செபியிடம் சமர்பித்த அறிக்கையின்படி மே 12-ம் தேதிக்குள் எல்ஐசி பங்கு விற்பனையை தொடங்க வேண்டும். இதனால் பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x