Published : 17 Apr 2022 02:28 PM
Last Updated : 17 Apr 2022 02:28 PM

அடுத்த வாய்ப்பு; ரஷ்யாவுக்கு ரூபிள்- ரூபாயில் இந்தியா உணவுப்பொருள் ஏற்றுமதி: இந்திய ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

புதின் மற்றும் பிரதமர்மோடி: பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக தடையால் ரஷ்யாவிடம் இருந்து அதிகபட்ச சலுகை விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வரும் நிலையில் புதிய வாய்ப்பாக இந்திய உணவுப்பொருட்கள் ரூபாயில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தடையால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக அளவில் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். அதன்படி ரஷ்யாவுடன் நட்பற்ற நாடுகள், கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு விற்பனைக்கு டாலருக்கு பதில் இனிமேல் ரஷ்யாவின் நாணயமான ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற அதிபர் புதினின் அறிவித்துள்ளார்.

இந்த நாடுகளில் பெரும்பாலானவை தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெருமளவு தங்கள் எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவையே நம்பியுள்ளன.

இருப்பினும் அந்த நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய முன் வரவில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முன்வராத சூழலில் ஆசியநாடுகளுக்கு அதிக அளவில், சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து ரூபாய் மற்றும் ரூபிள் அடிப்படையில் கரன்சியைப் பெற்று விநியோகம் செய்யவும் ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஏற்கெனவே இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஓசி, ஹெச்பிசிஎல் ஆகியன கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தை மதிப்பை விட ஒரு பீப்பாய்க்கு 35 டாலர் விலை குறைவாக ரஷ்யா கச்சா எண்ணெய் சப்ளை செய்கிறது, இந்த ஆண்டு 1.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை தங்கள் நாட்டிடமிருந்து இந்தியா வாங்கும் என ரஷ்யா எதிர்பார்க்கிறது.

இதுமட்டுமின்றி ரஷ்யாவுக்கு உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன் வரவில்லை. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஸ்விப்ட் சேவையை ரஷ்யாவில் தடை செய்த நிலையில், ரஷ்யாவின் பரிமாற்றத்தினை பெரிதும் முடக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வர்த்தக நிறுவனங்களில் மசாலா பொருட்கள், சர்க்கரை, பாஸ்தா, பருப்பு, எண்ணெய், அரிசி உள்ளிட்ட பெரும்பாலான உணவுப்பொருட்கள் தீர்ந்து விட்டது. இதனையடுத்து ரஷ்யா நிறுவனங்கள் இந்தியாவை அணுக தொடங்கியுள்ளன. இதற்காக இந்திய உணவுப் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றால் வழங்கப்பட்டு வந்த உணவு பொருட்களுக்கும், இந்தியாவினை அணுகியுள்ளன. இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் ரஷ்யா நிறுவனங்களை இணைக்கும் வகையில் நாளை மறுதினம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வாய்ப்பு

மளிகை பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் பிற உணவு பொருட்கள் தயாரிப்புக்காக ரஷ்யாவின் அஸ்ட்ராகானிலில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலான லோடோஸ் என்ற இடத்தில், இந்தியா - ரஷ்யா கூட்டு விவசாய தொழில் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் சங்கங்கள் இங்கு வந்து தொழில் தொடங்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் மற்றும் ரூபிள் முறையில் பரிமாற்றம் செய்யவும் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்திய விற்பனையாளார்களுக்கும், ஏற்றுமதியாளார்களுக்கும் இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் இந்த புதிய வர்த்தக வாய்ப்பு இந்திய விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ரஷ்யாவுடன் வணிகத்தில் ஈடுபட ஆர்வமாகவும் உள்ளனர்.

இந்தியா ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புடன் ரஷ்யாவின் தேவை என்னவோ அதன் பட்டியலையும் தங்கள் கூட்டமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு பகிர்ந்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில் ‘‘இந்தியா முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு நாங்கள் தேவையான பட்டியலை ஏற்கெனவே அனுப்பியுள்ளோம்’’ என்றும் கூறியுள்ளார்.

உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் முதலில் ஏற்றுமதி செய்யப்படும் எனத் தெரிகிறது. ஜூன் மாதத்தில் இருந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா சந்தையை இந்தியாவுக்கு மாற்றும் ரஷ்யாவின் இந்த முயற்சி இந்தியாவுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x