Published : 01 Apr 2022 11:15 AM
Last Updated : 01 Apr 2022 11:15 AM

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268 உயர்வு

புதுடெல்லி: வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268.50 அதிகரித்து ரூ.2406 ஆக உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின் மார்ச் மாதம் 22-ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் நேற்று லிட்டர் பெட்ரோல் 107.45 ரூபாய்; டீசல் 97.52 ரூபாய்க்கும் விற்பனையாகின. இன்று, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோலவே கடந்த 2021 நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அண்மையில் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது.

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.965.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x