Published : 26 Mar 2022 04:13 PM
Last Updated : 26 Mar 2022 04:13 PM

‘‘நிலக்கரி கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை; இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்’’ - மத்திய அரசு அறிவுறுத்தல்

நிலக்கரி சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி: கோப்புப் படம்

புதுடெல்லி: மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் நிலக்கரி அளவைத் தவிர கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதால் இந்தியாவின் மின்சாரத் தேவை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதுமட்டுமின்றி கோடைகாலம் தொடங்கியுள்ளதாலும் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மின்சாரத் தேவை தற்போது 10சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

இதனால் அனல் மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான நிலக்கரிக்கு உலகம் முழுவதுமே தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது.

இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

மின்சார உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மின்சார அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் நிலக்கரி விநியோக நிலையைக் கண்காணித்து வரும் மத்திய மின்சார அமைச்சகம், மின்சார உற்பத்திக்கு இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறப்படும் நிலக்கரியைத் தேவையான அளவுக்கு கையிருப்பில் வைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மாநில மின் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சார அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது. பற்றாக்குறை ஏற்பட்டால், அதனைச் சரிசெய்ய ஏற்கனவே விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் நிலக்கரி அளவைத் தவிர கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை என்பதை அமைச்சகம் கூறியுள்ளது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதவிர, மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x