Published : 24 Apr 2016 11:18 AM
Last Updated : 24 Apr 2016 11:18 AM
வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட்டது.
முன்னதாக அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக முடக்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது, தங்களது விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மல்லையா அளித்த பதில், அமலாக்கத் துறையினர் அளித்த தரவுகள், மற்றும் ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்போது நிரந்தரமாக விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது மத்திய வெளியுறவு அமைச்சகம்.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது:
விஜய் மல்லையா சமர்ப்பித்த பதில்கள், அமலாக்கத் துறையினர் பகிர்ந்து கொண்ட தகவல்கள், மற்றும் ஜாமீனற்ற கைது வாரண்ட் ஆகியவற்றைப் பரிசீலித்து பாஸ்போர்ட் சட்டப் பிரிவு 10 (3), (சி) மற்றும் 19 (3) (எச்) ஆகிய பிரிவுகளின் கீழ் விஜய் மல்லையாவின் முடக்கப்படுகிறது, என்று கூறியுள்ளார்.
மேலும் விஜய் மல்லையாவை நீதிக்கு முன் நிறுத்த அரசு திடமாக உள்ளது. தற்போது அவரை இந்தியா கொண்டு வருவதற்கான சட்ட ஆலோசனைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தன்னுடைய வெளிநாட்டு சொத்துக்களை தான் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று விஜய் மல்லையா திட்டவட்டமாக மறுத்ததையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் அமலாக்கத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT