Published : 21 Mar 2022 03:09 PM
Last Updated : 21 Mar 2022 03:09 PM

சர்க்கரை வேண்டாம்; எத்தனால் உற்பத்தி செய்யுங்கள்: நிதின் கட்கரி

மும்பை: சர்க்கரை உற்பத்தியிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை ஆலைகள் மாற வேண்டியது அவசியம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த சர்க்கரை மற்றும் எத்தனால் இந்தியா மாநாட்டில், உள்நாடு மற்றும் உலகளாவிய சர்க்கரை தொழிலில் உள்ள சவால்கள், இந்தியாவில் சர்க்கரை மற்றும் எத்தனால் துறையை புதுமையாகவும், நிலைத்தன்மை உடையதாகவும் மாற்றுவதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டின் தேவைக்கு ஏற்ப சர்க்கரை ஆலைகள், சர்க்கரை உற்பத்தியிலிருந்து எத்தனால் உற்பத்திக்கு மாற வேண்டும். தற்போது உள்ளது போல் சர்க்கரை உற்பத்தியை தொடர்ந்தால், வரும் காலங்களில் அது சர்க்கரை ஆலைகளுக்கு நல்லதல்ல. நமது நாட்டில் அரிசி, சர்க்கரை மற்றும் சோளம் ஆகியவற்றின் உற்பத்தி அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் சர்க்கரை உற்பத்தியை குறைத்து, எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதுதான் நல்லது.

எத்தனால் பொருளாதாரம் மிகச் சிறந்தது. பலவகை எரிபொருட்களில் இயங்கும், பிஃளக்ஸ் என்ஜின்களை தயாரிக்கும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 6 மாதத்துக்குள் இந்த வகை என்ஜின்களை தயாரிப்பதாக டொயாட்டோ, ஹூண்டாய், சுசுகி ஆகிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

சமீபத்தில் பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் காரை முன்மாதிரி அடிப்படையில் நாம் அறிமுகம் செய்துள்ளோம். 100 சதவீத பெட்ரோல் அல்லது 100 சதவீத எத்தனாலில் இயங்கும் வகையில் தங்களது கார்கள் இருக்கும் என டொயாட்டோ நிறுவன தலைவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் வரும் டொயாட்டோ கார்கள் கலப்பு மின்சார கார்களாக இருக்கும். இவை மின்சாரம் மற்றும் 100 சதவீத எத்தனாலில் இயங்க கூடியதாக இருக்கும்.

பிஃளக்ஸ் என்ஜினில் இயங்கும் கார்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு எத்தனால் நிரப்ப, பயோ எரிபொருள் நிலையங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புனேவில் 3 எத்தனால் நிலையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். ஆனாலும், எத்தனால் நிரப்ப இதுவரை யாரும் வரவில்லை. பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்கள் பிஃளக்ஸ் இன்ஜின் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளன. பிஃளக்ஸ் இன்ஜின் ஆட்டோரிக்ஷாக்களை கொண்டு வரவும் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

எத்தனால் உற்பத்தி செய்யும் சர்க்கரை ஆலைகள் தங்கள் தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதிகள் அல்லது இதர பகுதிகளில் எத்தனால் நிலையங்களை திறக்க வேண்டும். அப்போதுதான் 100 சதவீத எத்தனாலில் இயங்கும் ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார்களை அறிமுகம் செய்து, எத்தனால் நுகர்வை அதிகரித்து மாசுவை குறைக்க முடியும். இதன் மூலம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும், பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியை குறைக்க முடியும்.

எத்தனாலுக்கு நிச்சயம் மிகப் பெரிய சந்தை உருவாகும். எத்தனாலுக்கு மிகப் பெரிய சந்தை உருவாகுமா என யாரும் கவலைப்பட வேண்டாம். எத்தனால் சுத்தமான எரிபொருள். நாம் தற்போது 465 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்து வருகிறோம். நமது இ-20 திட்டம் நிறைவடையும் போது, நமது எத்தனால் தேவை 1,500 கோடி லிட்டராக அதிகரிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில், பிஃளக்ஸ் என்ஜின்கள் தயாராகும்போது, எத்தனால் தேவை 4,00 கோடி லிட்டராக அதிகரிக்கும். ஆகையால், எத்தனாலுக்கு மாறாமல், தொடர்ந்து சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டால், சர்க்கரை ஆலைகள் இழப்பை சந்திக்க நேரிடும்.

வேளாண்மையை எரிசக்தி மற்றும் மின்சக்தி நோக்கி மாற்றுவது தான் இப்போதைய தேவை. விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக இருப்பதோடு, எரிசக்தி விநியோகிப்பாளர்களாகவும் மாற வேண்டும்.

எத்தனால், மெத்தனால், பயோ எத்தனால், உயிரி-இயற்கை எரிவாயு, பயோ டீசல், பயோ-எல்என்ஜி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சாரத்தில் தான் எதிர்காலம் உள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x