Published : 02 Mar 2022 01:46 PM
Last Updated : 02 Mar 2022 01:46 PM

ஒரு பீப்பாய் 110 டாலர்: கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை இன்று ஒரு பீப்பாய் 110 டாலர் என்ற அதிகபட்ச விலையை தொட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.30 டாலர் அல்லது 5 சதவீதம் உயர்ந்து 110.23 டாலராக ஆக இருந்தது. இது கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாத நிலவரமாகும்.

இந்தநிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக பாங்க் ஆஃப் பரோடா தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நெருக்கடியின் காரணமாக எண்ணெய் விலை உயர்வது இந்தியப் பொருளாதாரத்திற்கு கணிசமான அபாயத்தை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் மற்றும் நிதி நிலைமையையும் பாதிக்கும். பணவீக்க உயர்வால் அதிக விலை உயர்வின் தாக்கம் மக்களை நேரடியாக பாதிக்க வாய்ப்புண்டு.

இதனால் இந்திய ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தபடி பணவீக்கம் தற்காலிகமாக இருக்காது. மேலும் உயரும் என்பதால் மத்திய அரசு அதன் நிதி நிலைப்பாட்டை அளவீடு செய்ய வேண்டியிருக்கும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுபோலவே ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி ‘‘கச்சா எண்ணெய் விலை 2014 ஆம் ஆண்டிலிருந்து அதிகபட்சமாக 7 சதவீதமாக உயர்ந்தன. ப்ரெண்ட் ஃபியூச்சர்ஸ் 7.00 டாலர் அல்லது 7.1 சதவீதம் உயர்ந்தது. ஒரு பீப்பாய் 104.97 டாலர் ஆக உயர்ந்தது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 110 டாலர் மற்றும் டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 110 டாலராக உயர்ந்துள்ளது.
உக்ரைனில் ஏற்பட்ட மோதலால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. கச்சா எண்ணெய் விநியோகம் குறையும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.’’ எனத் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக அளவில் அதிகமாக பெட்ரோலிய பொருட்களை நுகரும் நாடுகளில் அதன் விலை உயரும் ஆபத்து உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுபோலவே கச்சா எண்ணெய் கையிருப்பு குறைவாக உள்ள நாடுகளிலும் உடனடியாக விலை உயரும் எனத் தெரிகிறது. இந்தியாவில் பல நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ள நிலையில் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x