Published : 14 Feb 2022 07:33 PM
Last Updated : 14 Feb 2022 07:33 PM

‘‘உலகின் சிறந்த விமான நிறுவனமாக மாற்றுவோம்’’- ஏர் இந்தியா புதிய சிஇஓ உறுதி

இல்கர் ஐசி- கோப்புப் படம்

புதுடெல்லி: டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இல்கர் ஐசி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 1953-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. கடந்த பல ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வந்தது. அதனை வாங்க ஆளில்லாமல் இருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. கோவிட் தொற்று சூழலுக்கு பின்பு ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

ஏர் இந்தியாவை வாங்க தலாஸ் நிறுவனம் குறிப்பிட்ட மதிப்பு 18,000 கோடி ரூபாய் ஆகும். இதில் 15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்கான பாகமாகும், மீதமுள்ளவை மத்திய அரசுக்கு செலுத்தப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் கடந்த மாதம் மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது.

இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய டாடா குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக டாடா தெரிவித்திருக்கிறது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி.

நியமனம் குறித்து இல்கர் ஐசி கூறுகையில் “ நாட்டின் முன்னணி விமான நிறுவனமான டாடாவின் ஏர் இந்தியா நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பதில் பெருமை அடைகிறேன். டாடா குழுமத்தாருடன் பழகியிருக்கிறேன்.

வலிமையான பாரம்பரியம் கொண்ட டாடா நிறுவனத்தில் இணைந்துள்ளேன். எங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, உலகிலேயே சிறந்த விமான நிறுவனம் என்பதை நிரூபிப்போம். சிறந்த விமானப் பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.

கடந்த 1971-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இல்கர் ஐசி பிறந்தார். 1994-ம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், பொதுநிர்வாகம் பயின்ற ஐசி, அரசியல் அறிவியல் பாடம் பயின்றவர் ஆவார். மர்மராபல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த முதுகலைப்படிப்பையும் அவர் முடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x