Last Updated : 08 Feb, 2022 06:04 AM

 

Published : 08 Feb 2022 06:04 AM
Last Updated : 08 Feb 2022 06:04 AM

முதலீட்டை மீறிய நுகர்வு: இலவசங்களுக்குப் பதிலாக வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை

புதுடெல்லி: தேர்தலுக்கு முன்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும்போது பட்ஜெட்டில் சலுகைகளை எதிர்பார்ப்பது என்பது ஒரு பன்றியை பாடச் சொல்லிக் கேட்பதைப் போன்றது. அது உங்களது நேரத்தை மட்டும் வீணடிக்காது பன்றியையும் கலவரப்படுத்தும். (மேலே சொன்ன வாசகம் மார்க்ட்வைனின் மாற்றியமைக்கப்பட்ட கூற்று). 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ள சூழலில் இந்த பட்ஜெட் மக்கள் விரும்பும் வெகுஜன பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்விதம் எதுவுமே பட்ஜெட்டில் இடம் பெறாதது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

ஆனால் இலவசங்களுக்குப் பதிலாக கரோனா பெருந்தொற்றிலிருந்து பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் மீட்பதற்கு வசதியாக நீண்ட கால அடிப்படையிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேலை வாய்ப்பு உருவாக்கம், சீர்திருத்தங்கள் மற்றும் கடந்த பட்ஜெட் டிலிருந்து கற்றுக் கொண்ட சிறந்த திட்டங்களை தொடர்வது உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. பட்ஜெட் தினத்தன்று பெரும்பாலான பாஜக ஆதரவாளர்கள் மிகவும் முட்டாள் தனமான முடிவுக்கு வந்துவிட்டனர். குறிப்பாக உத்தரபிரதேச பாஜக அரசியல் வாதிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில், தங்களது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்ட தாகவே கூறியுள்ளனர்.

பட்ஜெட் பின்னணியில் உள்ள உத்திகளை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறியதன் வெளிப்பாடுதான் இது. சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெறுவதோடு 2024 பொதுத் தேர்தலை கணக்கில் கொண்டு போடப்பட்ட பட்ஜெட் இது. வளரும் பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்துவது, பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிய நல்வாழ்வு திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது குறிப்பாக கிராமப்புறங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவது, குறைந்தவிலை வீட்டு வசதி, சமையல் எரிவாயு, கழிப்பறை வசதி, தபால் துறை மூலமான மொபைல் வங்கிச் சேவை உள்ளிட்டவையாகும். எதிர்க்கட்சிகள் இதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. அவை தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொள்ளும் விதமாக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள டிஜிட்டல் சார்ந்த விஷயங்களை விமர்சித்துள்ளன.

இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வழியேற்படுத்த உதவுவது 4-வது புரட்சியான பசுமை எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்த பிற நுட்பங்களாகும். இதைத்தான் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வின் சாலைகளில் கார்கள் வலம்வந்த போது, குதிரைகள், குதிரை வண்டிக் காரர்களின் நலனைப் பார்க்கவில்லை என அப்போது எதிர்க்கட்சிகள் விமர்சித் ததைப் போலத்தான் இது உள்ளது. பொருளாதார சரிவை இருவித கோணங்களில் அணுக முடியும். முதலில் நுகர்வு மூலமும் அடுத்ததாக முதலீடு மூலமும்தான்.

முதலில் மக்களிடம் பணப் புழக்கத்தை (காங்கிரஸின் நியாயா அல்லது பாஜகவின் பிஎம் கிசான்) ஏற்படுத்த வேண்டும். மக்கள் பணத்தை செலவிட வேண்டும், பொருட்களை வாங்க வேண்டும், ஆலைகள் தொடர்ந்து உற்பத்தி செய்ய வேண்டும், அதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக வேண்டும். அடுத்த வழியாக அரசு கட்டமைப்பு வசதிகளான சாலை, துறைமுகம், வீட்டு வசதி, மருத்துவமனை முதலியவற்றில் முதலீடு செய்ய உள்ளது. இவையும் வேலைவாய்ப்பை உருவாக்கும். அத்துடன் தனியார் முதலீடுகளையும் ஈர்க்கும். அதன் மூலம் மேலும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில் இந்த பட்ஜெட் 2-வது வழியைத் தேர்வு செய்துள்ளது. ஆனால்அது மிகக் குறைவாகத்தான் கண்ணுக்குத் தெரியும், அது செயல்பட நீண்ட காலம் பிடிக்கும் இது அரசியல் ரீதியாக சற்று சிக்கலான அணுகுமுறையும்கூட. ஆனால் இது மிகச் சரியானது.

இந்தியாவில் மிகவும் பிரதானமானது வேலைவாய்ப்பு பிரச்சினை. அதை இந்த அரசு இதுவரையில் உரிய வகையில் கவனிக்கத் தவறிவிட்டது. உற்பத்தி ரீதியான வேலைவாய்ப்பு (பக்கோடா தயாரிப்பது அல்ல) அச்சே தின் மூலம் உருவாகும். அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வீட்டு வசதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு சற்று சிக்கலாகவும் இருக்கலாம். இத்துறையினரும் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதேசமயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் ஏன் கடன் தருவதில்லை என்ற கேள்வியை வங்கி அதிகாரிகளிடம் மத்திய நிதி அமைச்சர் கேட்கலாம். இதில் விடுபட்டுப் போன விஷயம் ஏற்றுமதி.

எந்த ஒரு நாடும் ஏழ்மை நிலையிலிருந்து நடுத்தர மக்களாக தரம் உயர்ந்ததில் ஏற்றுமதி அதிகரிக்காமல் சாத்தியமாகியிருக்காது. இதைத்தான் கிழக்கத்திய நாடுகள் செய்து வருகின்றன. இப்போது சீனாவும் இதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கு ஓரளவு எட்டப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த பட்ஜெட்டில் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் இடம்பெறவில்லை. உற்பத்தி அடிப்படையிலான ஊக்கச் சலுகை மிகச் சிறந்த திட்டமாகும். இது பல முதலீட்டாளர்களை ஈர்க்கும். கரோனா பெருந்தொற்று பாதிப்பு மற்றும் இப்போது பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பலனளிக்கும் திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அது உண்மையும்கூட, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் கச்சா எண்ணெய் விலை சரியலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்துக்கு அதுவும் காரணமாக இருக்கலாம். ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை இப்போதுள்ள 87 டாலரிலிருந்து இந்த ஆண்டு இறுதியில் 70 முதல் 75 டாலர் வரை குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்விதம் குறையாமல் போனால் அதற்கு மாற்று வழியையும் அரசு ஆராய வேண்டியிருக்கும்.பணியிடங்களில் நிலவும் சமனற்ற சூழல் குறித்த பிரச்சினையை மிகவும் சாதுர்யமாக நிதி அமைச்சர் தவிர்த்துவிட்டார். இந்தியா தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. இந்த சமயத்தில் வேலை வாய்ப்பை மட்டும்தான் பார்க்க வேண்டும். இப்போது பணியிடங்களில் சமனற்ற சூழல் குறித்து ஆராய முடியாது.

ஏழை மக்களின் உணவு, வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஊரக வேலை உறுதித் திட்டம், இலவச ரேஷன் உள்ளிட்டவை தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்படும்பட்சத்தில் ஏழ்மை நிலையிலிருந்து நடுத்தர நிலைக்கு மக்கள் உயர்வது நிச்சயம். இதன் மூலம் ஏற்றத் தாழ்வை போக்க முடியும். வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில் சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் கோடீஸ்வர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை யார் கவனிப்பார்கள். முதலாளித்துவம் என்பது பேராசை அதேசமயம் சமத்துவம் என்பது சமூக விரோதம். அறிவார்ந்த மனிதன் தன்னைப் பற்றி பெருமைப்படுவதைத்தான் விரும்புவான்.

அதற்கான வாய்ப்புகளில் சமத்துவத்தைத்தான் தேடுவான். பட்ஜெட் விமர்சனங்களில் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்று உண்டென்றால் அது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட பங்கு விலக்கல் இலக்கு. கணக்கு அடிப்படையிலான நிர்வாகத்தில் அதை எட்டாததற்கு பொறுப்பானவர்களின் தலை உருளும். தனியார் மயமாக்கல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை செயல்படுத்துவதற்கு அருண் சௌரி போன்ற திறமை வாய்ந்தவர்களை பொறுப்பில் அமர்த்த வேண்டும். குறைவான இலக்கு நிர்ணயித்து அதிக அளவை எட்டுவது நல்லதுதான். அந்த வகையில் அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இறுதியாக இந்த பட்ஜெட்டில் அதிக அளவிலான எண்கள் இடம் பெற்றிருக்கலாம். அவை அனைத்துமே நம் மீதான மதிப்பு. இலவசங்களுக்குப் பதிலாக முதலீடுகள் மூலம் நுகர்வை அதிகரித்து வேலைவாய்ப்பை உருவாக் குவது என்ற பட்ஜெட் அணுகுமுறை நீண்டகால அடிப்படையில் மிகுந்த மதிப்பையும் இந்தியாவுக்கு நலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த பட்ஜெட் மிகப் பெரிய வெற்றிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x