Published : 29 Dec 2021 06:41 PM
Last Updated : 29 Dec 2021 06:41 PM

விதிகளை மீறி பிரஷர் குக்கர்களை இணையத்தில் விற்கும்  நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: விதிமுறைகளுக்கு மாறாக பிரஷர் குக்கர்களை இணையத்தில் விற்கும் மின் வணிக நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் 18(2) பிரிவின் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, உரிய ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வேண்டாமென்று நுகர்வோர்கள் நலனுக்காக பாதுகாப்பு அறிவிப்பு ஒன்றை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

காயங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து நுகர்வோர்களை பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், இந்திய தரநிலைகள் அலுவலக சட்டத்தின் 16-ம் பிரிவின் கீழ், தர முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. தர கட்டுப்பாட்டு உத்தரவுகளின் வாயிலாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

மத்திய அரசால் தர முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ள பொருட்களின் சட்டவிரோத உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை, வாடகை, சேமிப்பு அல்லது காட்சிப்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு இரண்டு வருடம் வரையிலான சிறை தண்டனை, முதல் தடவை விதிமீறலுக்கு ரூபாய் இரண்டு லட்சத்திற்கு குறையாமல் அபராதம், இரண்டாம் முறையிலிருந்து ரூபாய் ஐந்து லட்சத்திற்கு குறையாமல் அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

விதிமுறைகளுக்கு மாறாக பிரஷர் குக்கர்களை இணையத்தில் விற்கும் மின் வணிக நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 15 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வழக்குகள் இந்திய தரநிலை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x