Last Updated : 01 May, 2021 05:14 PM

 

Published : 01 May 2021 05:14 PM
Last Updated : 01 May 2021 05:14 PM

இதுவரையில்லாத ஏற்றம்: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்வு

தொடர்ந்து 7-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.41 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''2021, ஏப்ரல் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 7-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகி வருகிறது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சூழல் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீட்சி நிலையை நோக்கி வருவது தெளிவாகிறது. போலி பில்கள், பல்வேறு இடங்களில் புள்ளிவிவரங்களை ஆழமாக ஆய்வு செய்தல், வருமான வரித்துறை, சுங்கத்துறை இணைந்த திறமையான வரி வசூல் ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாக வரி வருவாய் அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 384 கோடி வசூலானது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.27 ஆயிரத்து 837 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.35 ஆயிரத்து 621 கோடியும் வசூலானது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ.68 ஆயிரத்து 421 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 445 கோடி வசூலானது.

ஜிஎஸ்டி வரி 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபின், 2021, மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி வசூலான தொகைதான் அதிகபட்சமாக இருந்தது. அதை இந்த ஏப்ரல் மாதம் முறியடித்துள்ளது. கடந்த 7 மாதங்களாக ஜிஎஸ்டி வரி தொடர்ந்து ஒரு லட்சம் கோடியைக் கடந்து வருவது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதையே காட்டுகிறது. கடந்த மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி வரியை விடக் கடந்த மாதம் வசூலான தொகை 14 சதவீதம் அதிகமாகும்".

இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x