Published : 28 May 2020 09:26 PM
Last Updated : 28 May 2020 09:26 PM
நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் ((FSDC) 22வது கூட்டத்துக்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தலைமை தாங்கினார்.
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர்; இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்; நிதித்துறை, வருவாய்த் துறைச் செயலாளர்,, அஜய் பூஷண் பாண்டே; பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் தருண் பஜாஜ்; நிதி சேவைகள் துறை செயலாளர் தேபாசிஷ் பாண்டா; செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அஜய் பிரகாஷ் சாவ்ஹானே; செயலாளர், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ்; தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியன்; இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத் தலைவர் திரு. அஜய் தியாகி; இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத் தலைவர் திரு. சுபாஷ் சந்திர குந்தியா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத் தலைவர் சுப்ரதிம் பந்தோப்பாத்யாய்; மற்றும் இந்திய திவால் நிலை வாரியத் தலைவர் டாக்டர். எம். எஸ். சாஹூ உள்ளிட்ட இந்திய அரசு மற்றும் நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தற்போதைய உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பெரும்-பொருளாதார நிலைமை, நிதி நிலைத்தன்மை மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய விஷயங்கள், வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய முக்கிய விஷயங்கள், ஒழுங்குமுறை மற்றும் கொள்கை அளவிலான பதில் நடவடிக்கைகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்கள், சிறு கடன் நிறுவனங்களின் பணப்புழக்கம் மற்றும் நிதி வலிமை மற்றும் இதர தொடர்புடைய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டம் ஆய்வு செய்தது. மேலும், சந்தையின் நிலையற்றத்தன்மை, உள்நாட்டு வளங்களைச் சேகரித்தல் மற்றும் மூலதன ஓட்ட விஷயங்களும் இந்தக் குழுவால் விவாதிக்கப்பட்டன.
கரோனா பெருந்தொற்று நெருக்கடியின் ஒட்டுமொத்த பாதிப்பும், அதிலிருந்து மீளும் கால அளவும் தற்போது தெரியாததால், உலக நிதி அமைப்புக்கு கரோனா ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று இந்தக் குழு பதிவு செய்தது. பெருந்தொற்றின் பாதிப்பை எதிர்கொள்ளும் நோக்குடன் எடுக்கப்பட்ட உறுதியான நிதி மற்றும் நிதிக்கொள்கை நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் உணர்வுகளைக் குறுகிய காலத்துக்கு நிலைப்படுத்தி இருந்தாலும், நிதி பாதிப்புகளை இடைப்பட்ட மற்றும் நீண்ட காலத்துக்கு வெளிப்படுத்துவதற்கு, அரசு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகளும் தொடர்ந்து நிதி நிலைமைகளைக் கண்காணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. நிதிச் சந்தைகளின் பாதிப்புகளை நீண்ட காலத்துக்குத் தவிர்ப்பதை நோக்கியே அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் நடவடிக்கைகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT