Published : 11 Mar 2020 10:34 AM
Last Updated : 11 Mar 2020 10:34 AM

‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு உலக அளவில் 2 லட்சம் கோடி டாலர் இழப்பு: ஐக்கிய நாடுகள் சபை தகவல்

உலகை அச்சுறுத்தும் கோவிட்-19 வைரஸ் தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார நிலை 1 லட்சம் கோடி டாலர் முதல்2 லட்சம் கோடி டாலர் வரை இழப்புஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள்சபையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பாதிப்பை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசுகள் தயாராக இருக்குமாறும் வலியுறுத்திஉள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாடு (யுஎன்சிடிஏடி) தாக்கல் செய்த அறிக்கையில்இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சில நாடுகளில் இதன் தாக்கம் பொருளாதார தேக்க நிலையை உருவாக்கும் என்றும் சர்வதேச அளவில் பொருளாதார நிலை சரியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் 1.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800 ஆக உள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதத்துக்கும் கீழாக சரியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அளவு மற்றும் முதலீட்டாளர் நம்பகத்தன்மை முற்றிலுமாக சரியும். சர்வதேச அளவிலும் நுகர்வு குறையும். கடன் சுமை அதிகரிக்கும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் நிகழும். உலகின் பெரும்பாலான நாடுகள் திவால் சூழலுக்கு தள்ளப்படும் ஆபத்தும் உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளது.

பங்குச் சந்தைகளில் திடீர் ஏற்ற இறக்கம் மற்றும் முற்றிலுமாக சரிந்து போவது உள்ளிட்ட நடவடிக்கைகள் நிச்சயம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவை சார்ந்துள்ள நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என சுட்டிக் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x