Published : 15 Jan 2020 08:51 AM
Last Updated : 15 Jan 2020 08:51 AM

3 கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை ஹால்மார்க் முத்திரை கட்டாயமாகிறது

புதுடெல்லி

தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

இதன்படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும். அதேபோல இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை முழுவதுமாக செயல்படுத்த ஜனவரி 15, 2021 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இதை அமல்படுத்தாத வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது சில வர்த்தக நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை விற்பனை செய்கின்றன. இதுவரை 40 சதவீத நகைகள் மட்டுமே இத்தகைய முத்திரை பெற்றுள்ளன. 2021 ஜனவரி 15 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் ஹால்மார்க் முத்திரை பெற்றதாக இருக்க வேண்டும். அத்துடன் மூன்று கிரேடுகள் அதாவது 14,18 மற்றும் 22 கேரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு முன்பு 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது தற்போது மூன்று கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஹால்மார்க் முத்திரை அளிப்பதற்கு 234 மாவட்ட மையங்கள் உள்ளன. ஏறக்குறைய 28,849 வர்த்தகர்கள் பிஐஎஸ் பதிவு பெற்றுள்ளனர். மாவட்டங்களில் உள்ள தங்க நகை வர்த்தகர்கள் அனைவரும் ஹால் மார்க் மையங்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதை மீறுவோர் மீது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது அவரிடம் உள்ள பதிவு செய்யப்படாத தங்கநகைகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தியா ஆண்டுக்கு 700 டன் முதல் 800 டன் வரையிலான தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x