Published : 01 Oct 2019 11:34 AM
Last Updated : 01 Oct 2019 11:34 AM

தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.344 குறைந்தது: விலை என்ன?

சென்னை

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில், பவுனுக்கு ரூ.344 குறைந்துள்ளது.

இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.28,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்க விலையில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக்காலமாக உயர்ந்தது.

இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கிடையே கடந்த செப்.4-ம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. மூன்று வாரங்கள் முன்பு வரை, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

8 கிராம் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 344 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு 43 ரூபாய் குறைந்து 3,545 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல 24 கேரட் சுத்தத் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கும் குறைவாகவே இன்று விற்கப்படுகிறது. அதாவது 8 கிராம் சுத்தத் தங்கம் 29 ஆயிரத்து 616 ரூபாயாகக் குறைந்துள்ளது.

வெள்ளி விலையும் குறைந்தது

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளியின் மதிப்பு இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் குறைந்து ரூ.47.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூ.47,400-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற தன்மையால், தங்கம் மற்றும் வெள்ளி சந்தையும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x