Published : 03 Jul 2015 03:14 PM
Last Updated : 03 Jul 2015 03:14 PM
இந்தியாவில் தனிநபர் ஆண்டு மொத்த வருவாய் ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2014-ம் ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 ட்ரில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது ( 2 லட்சம் கோடி டாலர்கள்)
முதல் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நிலையை எட்ட 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அடுத்த 1 ட்ரில்லியன் டாலர்கள் வளர்ச்சி 7 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.
அதே போல் மொத்த தனிநபர் ஆண்டு வருவாய் 1,610 டாலர்கள், அதாவது சுமார் ரூ.1 லட்சமாகியுள்ளது. அதாவது 2014-ம் ஆண்டில் தனி நபர் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சமாகியுள்ளது. இதற்கு முந்திய ஆண்டு தனி நபர் மொத்த ஆண்டு வருவாய் 1,560 டாலர்களாக இருந்தது.
உலக வங்கியின் இந்த தரவுகளைக் கொண்டு தி இந்து (ஆங்கிலம்) செய்த பகுப்பாய்வின் படி 10 ஆண்டுகளுக்கு சற்று அதிகமான காலக்கட்டத்தில் இந்தியா 'கீழ் நடுத்தர வருவாய்' நாடு என்பதிலிருந்து ‘மேல் நடுத்தர வருவாய்’ நாடு என்பதற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2014-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4%, இதன் மூலம் சீனாவுடன் இந்தியா அதிவேக வளர்ச்சி காணும் பொருளாதாரமாகியுள்ளது. ஆனால் சீனா 10.4 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதார நாடாகும்.
தற்போது இந்தியா 2.06 ட்ரில்லியன் டாலர்கள் நாடாக உயர்வு பெற்றுள்ளது. அதாவது 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிதிநெருக்கடி நிலைமைகளுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தனிநபர் ஆண்டு மொத்த வருவாய் அதிகரித்தாலும் இப்போதைக்கு இந்தியா 'கீழ் நடுத்தர வருவாய்' நாடு என்ற தகுதி நிலையிலேயே உள்ளது.
உலக வங்கியின் தரவுகளை அலசி ஆராய்ந்ததில் இந்தியாவின் சராசரி ஆண்டு வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் 8.9% என்பதாக தி இந்து (ஆங்கிலம்) வந்தடைந்துள்ளது.
இந்த வளர்ச்சிப் போக்கின்படி இந்தியா ‘மேல் நடுத்தர வருவாய்’ நாடாக 2026-ம் ஆண்டு உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன் ஒப்பிடுகையில் சீனா, அதன் தனி நபர் ஆண்டு மொத்த வருவாய் 7,380 டாலர்களுடன் ஆண்டு வளர்ச்சி விகிதமான 15.6% உடன் தற்போது ‘மேல் நடுத்தர வருவாய்’ நாடாக இருப்பதிலிருந்து 2018-இல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போல் ‘உயர் வருவாய்’ நாடு என்ற தகுதியை எட்டிவிடும்.
இதனுடன் ஒப்பிடும் போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் இப்போதுள்ள நிலையை எட்ட 2039-ம் ஆண்டு வரையாகும் என்று தெரிகிறது.
ஒருநாட்டில் உள்ள ஒட்டுமொத்த உற்பத்தியாளர்கள் சேர்க்கும் மதிப்புடன் அயல்நாடுகளில் பணியாற்றும் குடிமக்களிடமிருந்து வரும் வருவாயைக் கூட்டி அதனை நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்து தனி நபர் ஆண்டு வருவாய் உலக வங்கியினால் கணக்கிடப்படுகிறது.
இது குறித்து உலக வங்கி தலைமை பொருளியலாளர் மற்றும் மூத்த துணைத் தலைவருமான கவுஷிக் பாசு கூறும்போது, "நம் வளர்ச்சி, முன்னேற்றம் என்பதை பல்வேறு விதங்களில் கணக்கிட வேண்டும் என்றாலும், வருவாய் அடிப்படையிலான அளவு கோல், குறிப்பாக நாட்டின் மொத்த வருவாய் என்பதே மைய அளவுகோலாக வைத்தே பொருளாதார திறன் அல்லது வளர்ச்சியை கணக்கிட முடியும்"
எங்களது சமீபத்திய தரவுகளின் படி, உலக பொருளாதார புவியியல் நிறைய மாற்றம் அடைந்துள்ளது. 1994-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 56.1% அதாவது 3.1 பில்லியன் மக்கள் (சுமார் 300 கோடி) குறைந்த வருவாய் உள்ள 64 நாடுகளில் வாழ்ந்து வந்தனர். ஆனால் 2014-ம் ஆண்டு இது 8.5% ஆக குறைந்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 4 நாடுகள் கீழ் நடுத்தர வருவாய் நிலைக்கு உயர்ந்துள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT