Published : 03 Sep 2019 02:43 PM
Last Updated : 03 Sep 2019 02:43 PM

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு: பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை எதிரொலி

மும்பை
பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 6 ஆண்டுக்கு பிறகு 5 சதவீதமாக சரிந்துள்ளதாக வெளியான தகவலால் பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.
நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டு அறிக்கை அண்மையில் வெளியானது. இதில் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்தது. கடந்த 2012-13-ம் ஆண்டின் 4வது காலாண்டில் இருந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்தது, அதாவது 6 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்ததுள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த இந்த புள்ளி விபரங்கள் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த நிலையில் இதன் தாக்கம் இன்று பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. விடுமுறைக்கு பிறகு இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியவுடனேயே பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கைகளால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தன. 36800 புள்ளிகளாக வர்ததகமாகி வருகிறது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 169 புள்ளிகள் சரிந்து 10,850 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக நிதி மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x