Published : 17 Jul 2019 08:46 AM
Last Updated : 17 Jul 2019 08:46 AM
புதுடெல்லி
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கு புதிய முயற்சியை அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவில், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான பங்கு விலக்கலை அரசு மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதுமாக தனியாரிடம் விற்பதற்கு அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்காக, அதற்கான தனியார் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு விமான கண்காட்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரி விக்கும் பொருத்தமான விண்ணப்பதாரர் கள், சில குறிப்பிட்ட கணக்குகளைத் தவிர்த்து ஏர் இந்தியா நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும், விற்பனை சார்ந்து தங்கள் பரிந்துரைகளையும் முன்வைத்துக் கொள்ளலாம் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் குறைந்த கட்டணத்திலான விமான சேவையை வழங்கத் தொடங்கிய நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது சந்தையை இழக்க ஆரம்பித்தது. ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்தது. அந்நிறுவனத்துக்கு ரூ.56,000 கோடி கடன் உள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் பாதிப் பங்குகளை மட்டும் தனியாருக்கு விற்க அரசு முயற்சித்த நிலையில், பொருத்தமான முதலீட்டாளர்களை அரசால் ஈர்க்க முடியவில்லை. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பின்போது, ஏர் இந்தியாவை விற்பதற்கான திட்டங்கள் புதுப்பிக்கப் படும் என்று தெரிவித்திருந்தார். இந் நிலையில் அரசு இந்த புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT