Published : 09 Jun 2015 10:09 AM
Last Updated : 09 Jun 2015 10:09 AM

சென்செக்ஸ் 245 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றும் சரிவான வர்த்தகம் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென் செக்ஸ் 245 புள்ளிகள் சரிந்து 26523 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 70 புள்ளிகள் சரிந்து 8044 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. கடந்த எட்டு மாதத்துக்குப் பிறகு சந்தை குறைவான புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது.

வங்கி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் உலோகத்துறை பங்குகள் அதிக வீழ்ச்சி கண்டன. எண்ணெய் நிறுவனப் பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2 சதவீதம் வரை சரிந்தது. சன் பார்மா பங்குகளும் 2 சதவீத சரிவைக் கண்டன. டாடா ஸ்டீல், வேதாந்தா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கெய்ர்ன் இந்தியா நிறுவனப் பங்குகள் 3 சதவீதம் வரை சரிந்தன.

பங்குச் சந்தை விவரங்கள்படி அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மூன்று நாட்கள் முதலீடுகளை அதிக அளவில் திரும்ப பெற்றுள்ளனர். இந்திய பங்குச் சந்தையிலிருந்து 210 மில்லியன் டாலர் முதலீடுகளை கடந்த நான்கு வர்த்தக நாட்களில் திரும்ப பெற்றுள்ளனர். அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச அளவில் இறக்கமான சந்தை நிலவரத்தாலும் பங்குச் சந்தை இறக்கம் தொடர்வதாக சந்தை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சன் டிவி பங்கு விலை சரிவு

பங்குச் சந்தையில் சன் டிவி பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. நேற்றைய வர்த்தகத்தில் இந்நிறுவன பங்கு விலை அதிகபட்சம் 28% வரை சரிந்தது. கடந்த 52 வாரங்களில் இப்பங்கு விலை இந்த அளவுக்கு சரிந்தது இதுவே முதல் முறையாகும்.

நிறுவனத்தின் 33 சேனல்களுக்கு அனுமதி ரத்தாகலாம் என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து இந்நிறுவன பங்கு விலைகள் சரிந்தன. இதனிடையே தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என நிறுவனம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் முடிவில் சன் டிவி பங்கு 21.5% சரிந்து ரூ.279.60 என்ற விலையில் வர்த்தகமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x