Last Updated : 10 May, 2015 12:06 PM

 

Published : 10 May 2015 12:06 PM
Last Updated : 10 May 2015 12:06 PM

சுப்ரதா ராய் ஜாமீன் விவகாரம்: ரூ.10,000 கோடி கொடுக்க சஹாரா ஒப்புக்கொண்டது

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கடந்த ஒரு வருடமாக திஹார் சிறையில் இருக்கிறார். சஹாரா குழுமம் முறைகேடாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். 10,000 கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்தினால் மட்டுமே ஜாமீன் கொடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், ஜாமீன் தொகை செலுத்துவற்கு சஹாரா குழுமம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சஹாரா குழுமம் ரூ.10,000 கோடியை திரட்ட எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள சொகுசு ஓட்டலை விற்பதற்கு செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் கடும் நிபந்தனை விதித்தது. தேவையான பிணைத்தொகையை இன்னும் மூன்று மாதத்துக்குள் செலுத்த வேண்டும் இல்லை எனில் சஹாரா குழுமத்தின் சொத்துகள் முடக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.

இதனிடையே பிணைத் தொகையை செலுத்த சஹாரா நிறுவனம் தயாராக உள்ளதாக இந்த வழக்கில் சஹாரா நிறுவனத்துக்காக வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் வியாழன் அன்று ஜாமீன் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அதற்குள் ஜாமீனுக்குத் தேவையான அனைத்து நடைமுறைகளும் தயாராக இருக்கும் என்று சஹாரா குழுமத்தின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு 24,000 கோடி ரூபாயை திருப்பி கொடுக்காத வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி முதல் திஹார் சிறையில் இருக்கிறார் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x