Last Updated : 18 May, 2015 10:02 AM

 

Published : 18 May 2015 10:02 AM
Last Updated : 18 May 2015 10:02 AM

தொழில் புரிவதற்கான சூழல் உருவாக்கப்படும்: அருண் ஜேட்லி தகவல்

தொழில் புரிவதற்கான சூழலும் நியாயமான வரி விதிப்பு முறைகளும் கொண்டுவரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். பா.ஜ.க அரசின் இரண்டாம் ஆண்டு திட்டங்கள் குறித்து இவ்வாறு கூறினார். தற்போது செய்து வரும் சீர்திருத்தங்கள் எந்தவிதமான தொய்வும் இல்லாமல் இதே வேகத்தில் நடக்கும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார நடவடிக்கைகள் என்பது அறிவிப்புகளாக மட்டுமே இருக்கிறது. செயல்பாடுகளில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று சில நிறுவனங்களின் தலைவர்கள் கூறிய குற்றச்சாட்டை அருண் ஜேட்லி நிராகரித்தார்.

வரி குறித்து பேசிய ஜேட்லி, வரி விஷயத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மறைமுக வரியான, சரக்கு மற்றும் சேவை வரி வரும் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான்கு வருட காலத்தில் இந்த இலக்கு எட்டப்படும். கார்ப்பரேட் வரி குறைக்கப்படுவதால் அதில் இருக்கும் விதிவிலக்குகளும் குறைக்கப்படும். ஆனால் தனிநபர்களுக்கு விதி விலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

தொழில் புரிவதற்கான சூழலை உருவாக்க பெரிய திட்டம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேறும்போது முதலீடுகள் அதிகரிக்கும். அதேபோல திட்டங்களும் வேகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

அரசு எதுவும் செய்யவில்லை என்ற எண்ணம் சிலருக்கு இருந்தாலும், அரசு வேகமாக முடிவெடுத்து வருகிறது. இதனால் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சிக்கு மேல் இருக்கும் என்று முதலீட்டாளர்கள் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.

தற்போதைய அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது, இந்த வேகத்தை தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அதே சமயத்தில் சர்வதேச மந்தநிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தியாவுக்கு சவாலாக உள்ளன.

ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்த சில காலம் ஆகும். தற்போதைய சர்வதேச மந்தநிலையிலே 7.5 முதல் 8 சதவீத வளர்ச்சி என்பது சிறப்பானது.

நாங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் ஒரே திசையில் உள்ளது. இதில் மாறுபட்ட கருத்துக்கோ, குழப்பத்துக்கோ இடமில்லை. அரசாங்கத்தை தவிர வேறு எங்கும் எங்களது கவனம் இல்லை என்றார்.

வட்டி குறைப்பு தேவை

வரும் ஜூன் 2-ம் தேதி ரிசர்வ் வங்கி தன்னுடைய கடன் மற்றும் நிதிக்கொள்கையை அறிவிக்க இருக்கிறது. இந்த நிலையில் வட்டி குறைப்பு பற்றி கேட்டதற்கு உங்களுடைய எதிர்பார்ப்புதான் என்னுடைய எதிர்பார்ப்பும், வட்டியை குறைக்க வேண்டும் என்று ஜேட்லி தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x