Published : 29 Apr 2015 11:08 AM
Last Updated : 29 Apr 2015 11:08 AM
நடப்பாண்டில் ரிசர்வ் வங்கி இரு முறை வட்டியை குறைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் 0.25 சதவீத அளவுக்கு வட்டி குறைக்கப்பட்டது. ஆனால் 70 வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
21 வங்கிகள் 0.1 முதல் 0.5 சதவீதம் வரை வட்டியை குறைத்திருக்கின்றன. இதில் 4 பொதுத்துறை வங்கிகள், 6 தனியார் துறை வங்கிகள் 11 வெளிநாட்டு வங்கிகள் அடங்கும். இது கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நிலவரம் என்று எழுத்து பூர்வமாக மாநிலங்களவைக்கு கொடுத்த பதிலில் ஜெயந்த் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.
இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த சின்ஹா கிஸான் விகாஸ் பத்திரம் மூலமாக இதுவரை 1,090 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
மானிய சீர்திருத்தங்கள் தொடரும்
மானியங்கள் மீதான சீர்த்திருத்தங்கள் தொடரும் என்றும் இதன் மூலம் 2017-ம் நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறையை ஜிடிபியில் 3.5 சதவீத அளவுக்கு குறைக்க முடியும் என ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4.1 சதவீதமாக இருந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு கொடுக்கப்படும் சமையல் எரிவாயு மானியம் நேரடியாக பயனாளர்களுக்கு கொடுக்கப்படுவதால் தேவையானவர்களுக்கு மட்டுமே மானியம் செல்கிறது.
நிரந்தர கணக்கு எண் (பான்) இல்லாததால் மார்ச் 2015 நிலவரப்படி 4 லட்சம் டிமேட் கணக்குகள் முடிக்கப்பட்டிருக்கின்றன என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். டிமேட் கணக்குக்கு 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பான் எண் அவசியம். ஆனால் பான் எண் இல்லாமல் இருந்த 4 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த கணக்குகள் சுமார் 4,755 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT