Published : 13 Jan 2015 12:23 PM
Last Updated : 13 Jan 2015 12:23 PM

தொழில்துறை உற்பத்தி 3.8% - பணவீக்கம் 5% சதவீதமாக உயர்வு

இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக் குறியீடு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இது மைனஸ் 4.2 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இது 1.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குறியீடு 2.5 சதவீதமாக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 0.4 சதவீதமாக சரிந்தது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 2.2 சதவீதமாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 0.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தித் துறை வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தது. அக்டோபரில் இது மைனஸ் 7.6 சதவீதமாக இருந்தது. இதேபோல சுரங்கத்துறை வளர்ச்சி 3.4 சதவீதமாக இருந்தது. அக்டோபரில் இது 3.8 சதவீத அளவுக்கு இருந்தது. மின்துறை வளர்ச்சி 10 சதவீதமாக சரிந்துள்ளது. இது அக்டோபரில் 13.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடிப்படைப் பொருள்களின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது. இது கடந்த அக்டோபரில் 5.4 சதவீதமாக இருந்தது.

இருப்பினும் நுகர்பொருள் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை உயர்வு, நகர்ப்புறத்தில் பொருள்களின் பணவீக்கம் 5.32 சதவீதமாக இருந்தது. இது நவம்பரில் 4.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற பணவீக்கம் 4.71 சதவீதமாக இருந்தது. காய்கறிகளின் பணவீக்கம் 0.58 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.

வட்டிக் குறைப்புக்கு வாய்ப்பு

2016-ம் ஆண்டு ஜனவரியில் பணவீக்கத்தை 6 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு இருந்தது. இதை எட்டும் விதமாக கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதும் வட்டிக்குறைப்பு வாய்ப்புகளை பிரகாசப்படுத்தியுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய் யப்பட்ட பிறகு அரை சதவீத அளவுக்கு கடனுக்கான வட்டி குறைக்கப்படலாம் என்று இக்ரா நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் தெரிவித்துள்ளார். மூடிஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவுதான் இக்ரா ஆகும்.

கடந்த ஓராண்டாக கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் 8 சதவீத அளவிலேயே ஆர்பிஐ தொடர்ந்து வைத்துள்ளது. வட்டியைக் குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சகமும், தொழில் துறையினரும் வலியுறுத்திய போதிலும் அதை ரிசர்வ் வங்கி பொருட்படுத்தவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x