Published : 18 Dec 2014 10:54 AM
Last Updated : 18 Dec 2014 10:54 AM
இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட கூறினார். நொய்டாவில் உள்ள தேசிய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று அவர் பேசியதாவது:
இந்த மையம் மாதத்துக்கு 15 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 2 லட்சம் பேருக்கு இதனால் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்த மையத்தில் உள்ள மாணவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் திறன் மேம்பாடு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
உலகிலேயே மிகச் சிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். அதிலும் குறிப்பாக காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் சிறந்து விளங்க இந்த மையம் உதவும். இதன் மூலம் இங்கிருந்து காலணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரிக்கும் என்று நிகழ்ச்சியில் பேசிய நிறுவன மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலர் அமிதாப் கான் குறிப்பிட்டார்.
இந்த மையத்திலிருந்து ஆண்டுக்கு 2,00,503 பேர் பயிற்சி பெறுவதாகவும், அவர்களில் 1,61,773 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் இந்த வாய்ப்புகள் ஓடிசி மூலம் கிடைத்துள்ளதாகவும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயல்படுத்தும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு அங்கமாக ஓடிசி திகழ்கிறது. இந்த மையங்களில் தேவையான இயந்திர கருவிகள், பயிற்சிக்கான கருவிகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இம்மையத்தால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு காலணி தயாரிப்பு நிறுவனங்களில் வேலையும் வாங்கித் தரப்படுகிறது.
இந்த மையம் சென்னை, கொல்கத்தா, நொய்டா, பர்ஸத்கஞ்ச், சிந்த்வாரா, ரோதக், ஜோத்பூர், குணா ஆகிய இடங்களில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT