Published : 23 Dec 2014 10:49 AM
Last Updated : 23 Dec 2014 10:49 AM

சிமென்ட் விலை உயர்வுக்கு உற்பத்தியாளர்கள் காரணம் அல்ல: இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்

சிமென்ட் விலை அதிகரிப்புக்கு காரணம் உற்பத்தியாளர்கள் அல்ல என்று இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் கூறினார்.

சிமென்ட் உற்பத்திக்கான செலவு அதிகரித்து வருவதும், சந்தை தேக்கமான நிலையில் இருப்பதாலும் சிமென்ட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய சீனிவாசன், கடந்த சில மாதங்களாக பில்டர்களும், அரசியல்வாதிகளும் சிமென்ட் விலை அதிகமாக இருக்கிறது என்று சிமென்ட் உற்பத்தியாளர்கள் மீது குறை கூறுகின்றனர். ஆனால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அரசுக்கான வரிகள், நிலையான செலவுகள் எல்லாவற்றையும் கணக்கிட்டால் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரிய லாபமில்லை என்றார்.

கட்டுமான துறையினர் சிமென்ட் விலை அதிகம் என்று சொல்கின்றனர். மொத்த கட்டுமான செலவில் சிமென்டுக்கான செலவு 4 முதல் 5 சதவீதமாகத்தான் உள்ளது. ஒரு சதுர அடி கட்டுமானத்துக்கு அரை மூட்டை சிமென்ட் பயன்படுத்துகிறார்கள் என்றால் ரூ.185 தான் செலவாகும். ஒரு சதுர அடிக்கு 185 ரூபாய்தான் சிமென்டுக்கான செலவு அப்படியிருக்க சிமென்ட் விலை பாதிக்கிறது என்று பில்டர்கள் தரப்பு சொல்வதில் உண்மையில்லை.

ஒரு மூட்டை ரூ.370 என்றால் மாநில அரசுக்கான வாட் வரி ரூ.48, உற்பத்தி வரி ரூ.49, போக்குவரத்து ரூ.40 செலவா கிறது. இது தவிர உற்பத்தி செலவுகள் உள்ளன. சிமென்ட் உற்பத்தியாளர்கள் குறைந்த லாபத்திலேயே இருக்கின்றனர் என்றார். கட்டுமான துறை இந்திய அளவில் இரண்டு மூன்று சதவீதமே வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய அளவில் 35 கோடி டன் சந்தை தேவை என்றால், அதில் 16 கோடி டன் தென்னிந்திய அளவில் இருக்கிறது. ஆனால் இந்த சந்தையின் தேவை கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக குறைந்துள்ளது. இதனால் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது முழுமையான உற்பத்தியை மேற்கொள்ளவில்லை என்றார்.

இந்தியா சிமென்ட் தன்னுடைய உற்பத்தி திறனில் 55 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே மேற்கொள்கிறது. இதனால் உற்பத்திக்கான செலவுகள் அதிகரிக்கிறது. கடந்த காலாண்டில் குறைந்த லாபமே கண்டுள்ளோம் என்றார். பொருளாதார வளர்ச்சிக்கு சிமென்ட் உற்பத்தி துறையை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார். உள்கட்டமைப்புதுறை சார்ந்த திட்டங்கள் நடைமுறைக்கு வரும் போது சிமென்ட் உற்பத்தி துறையும் வளர்ச்சி காணக்கூடிய வாய்ப்புள்ளது என்றார்.

பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், பொருளாதார வளர்ச்சி என்பது விலையை கட்டுப்படுத்தி வைத்திருப்பது மட்டுமல்ல என்றவர் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றார்.பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவே இந்தியா சிமென்ட் துறையின் அடுத்த கட்ட முடிவுகள் இருக்கும். இப்போதைய நிலை யை தக்கவைத்துக் கொள்வதற் கான திட்டங்களை மட்டுமே மேற் கொண்டுவருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x