Last Updated : 27 Nov, 2014 11:17 AM

 

Published : 27 Nov 2014 11:17 AM
Last Updated : 27 Nov 2014 11:17 AM

ஜெனீவாவில் இன்று டபிள்யூடிஓ கூட்டம்

உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) பொதுக்குழு கூட்டம் ஜெனீவாவில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. உணவு மானிய விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தக் கூட்டம் ஒரு நாள் ஒத்திப்போடப்பட்டு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (டிஎப்ஏ) அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் இந்தக் கூட்டம் நடைபெறும். மேலும் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் பின்பற்றும் உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை அபராதம் விதிக்கக் கூடாது என்ற நிபந்தனையை வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. பாலி-யில் நடைபெற்ற மாநாட்டில் 2017-ம் ஆண்டு வரை அமைதி விதிமுறைகளை பின்பற்றலாம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்திலிருந்தே டபிள்யூடிஓ உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் டிஎப்ஏ-வை நிறைவேற்ற இந்தியாவை வற்புறுத்தி வந்தனர். ஆனால் உணவு மானியத்துக்கு தீர்வு காணப்படாத வரை இதை ஏற்க முடியாது என்று இந்தியா உறுதியாக மறுத்து வந்தது.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இந்தியா, அமெரிக்கா இடையிலான கருத்துவேறு பாடுகள் களையப்பட்டன. இதையடுத்து நாளை நடைபெற உள்ள டபிள்யூடிஓ கூட்டத்தில் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

இந்தியாவில் 6 கோடி மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ.1 முதல் ரூ.3 விலையில் மாதத்துக்கு 5 கிலோ வழங்கப்படுகிறது. இதற்காக 6.20 கோடி டன் உணவு தானியத்தை அரசு பாதுகாத்து வைக்கிறது. ஆனால் இவ்விதம் அரசே உணவு தானியத்தை சேமித்து வைக்கக் கூடாது என டபிள்யூடிஓ வலியுறுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x