Published : 05 Jul 2019 03:54 PM
Last Updated : 05 Jul 2019 03:54 PM
தங்கம், பெட்ரோல், சிகரெட்டுக்கு விரிவிதிப்பு, பணக்காரர்களுக்கு கூடுதல் வரி, கார்ப்பரேட் வரி குறைவு, வீட்டுக்கடன், மின்னணு வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு வருமானவரிச் சலுகை போன்றவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசின் முதலாவது பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு-
* பான் கார்டும், ஆதார் கார்டும் மாற்றிக் கொள்ளத்தக்க வகையில் வரப்போகிறது. அதாவது வருமானவரி செலுத்தும்போது பான்கார்டு இல்லாவிட்டால், ஆதார் எண்ணை மட்டும் அளித்து ஐடி ரிட்டனை தாக்கல் செய்யலாம்.
* மின்னணு வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் குறைக்கப்படும். மின்னணு வாகங்களை வாங்க வங்கியில் கடன் பெற்று வட்டி செலுத்திவந்தால், 1.5 லட்சம் வரை வருமானவரி விலக்கு அளிக்கப்படும்.
* வீட்டுக்கடன் பெற்றிருப்பவர்களுக்கு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரை வருமானவரி விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் வீடு வாங்குவோர் ரூ.7 லட்சம்வரை பயன்பெறுவார்கள்.
* வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியா வந்தபின் எந்தவிதமான காத்திருப்பும் இன்றி ஆதார் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
* ஒரு ரூபாய் முதல் ரூ.20 வரை புதிய சில்லரைக் காசுகள் விரைவில் புழக்கத்துக்கு விடப்படும்.
* பெட்ரோல், டீசல் மீதான கூடுதல்வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
* வர்த்தகத்தில் ரொக்கப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கியில் இருந்து பணம் எடுத்தால், 2 சதவீதம் வரி விதிப்பு
* அரசு வங்கிகளுக்கு மறுமுதலீடாக ரூ.70 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க உள்ளது.
* இந்த ஆண்டில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தவன் மூலம் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, விரைவில் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும்.
* புதிய தேசிய அளவிலான கல்விக்கொள்கை விரைவில் வெளியிடப்படும். இந்தியக் கல்வியை புதிய கோணத்துக்கு பரிமாற்றம் செய்து உலக அளவில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பானதாக மாற்றும்.
* ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி திட்டம்
* தேசத்தின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 2022-ம் ஆண்டில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் மின்சாரம், சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்படும்.
* 3 கோடி சில்லரை வர்த்தகர்களுக்கு பிரதமர் கரம் யோகி மான் தான் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கு வர்த்தகர்களிடம் ஆதார் எண்ணும், வங்கிக்கணக்கும் வைத்திருக்க வேண்டும்.
* ஆண்டுக்கு ரூ.400 கோடிவரை விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடிவரை விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வரி விதிக்கப்படும்.
* தங்கம் இறக்குமதி செய்யப்படும் போது விதிக்கபடும் சங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரையில் பதிக்கும் டைல்ஸ் கற்கள், முந்திரி பருப்பு, ஆட்டோமொபைல் பாகங்கள், செயற்கை ரப்பர், டிஜி்ட்டல் கேமிரா, சிசிடிவி கேமிரா ஆகியவற்றுக்கான அடிப்படை சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.
* சிகரெட்டின் நீளம் 65மிமீட்டருக்கு அதிகமாக இருந்தால், 1000 சிகரெட்டுக்கு ரூ.5 சுங்கவரி விதிக்கப்படும். மென்று சுவைப்படும் புகையில், ஜர்தா, புகையிலை தொடர்பான பொருட்களுக்கு 0.5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* ஆண்டுக்கு ரூ.5 கோடி விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மட்டும் ரிட்டன் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட உள்ளது.
*பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ரூ.50 கோடிவரை விற்றுமுதல் இருப்பவர்கள், பிம், யுபிஐ, ஆதார்பே, என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் ஆகியவற்றின் மூலம் பணப்பரிமாற்றம் செய்தால், கட்டணம் விதிக்கப்படாது.
* அடுத்த 5ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடியை அடிப்படை கட்டுமானத்துக்கு மத்திய அரசு செலவிட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT