Published : 01 Aug 2017 09:47 AM
Last Updated : 01 Aug 2017 09:47 AM
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 12 முதல் 18 மாதங்களில் 6.5 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்றும் மூடி’ஸ் கூறியுள்ளது. தர மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் நேற்று வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் ஜிஎஸ்டி சட்டம் இந்திய பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்தியாவில் வாராக்கடன் மூலம் வங்கிகளுக்கு அதிக ரிஸ்க் தரும் தொழில்களாக மின்சாரம், உருக்கு மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகள் உள்ளதாக 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் கூறியுள்ளனர்.
‘இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான நம்பிக்கைகள்’ என்கிற கருத்து கணிப்பினை ஐசிஆர்ஏ நிறுவனத்துடன் இணைந்து மூடி’ஸ் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட சந்தை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
60 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் இந்தியாவின் பொருளதார வளர்ச்சி அடுத்த 12 முதல் 18 மாதங்களில் 6.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதத்துக்குள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். பணமதிப்பு நீக்க பாதிப்புக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி மீண்டு வருவதையும் ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
2016-17 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2017-18 நிதியாண்டில் 7.7 சதவீதமாகும் இருக்கும் என்றும் மூடி’ஸ் கணித்துள்ளது, மேலும் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி அளவுக்கு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது தொடரும்நிலையில், இந்தியா இந்த கணிப்பை மிக வேகமாகவே எட்ட முடியும். பண மதிப்பு நீக்கம் குறுகிய காலத்தில் வளர்ச்சியை கட்டுப்படுத்தியது என்று மூடி’ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மேரி டிரோன் கூறினார். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாவதற்கு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமல்படுத்தியது உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT